அரபி கடல் பைபர்ஜாய் புயல் தீவிரமடைந்தது! தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் மழை பெய்யும்!
டெல்லி: அரபிக் கடலில் உருவாகி உள்ள பைபர்ஜாய் புயல் தீவிரமடைந்து வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பைபர்ஜாய் புயல் அடுத்த 12 மணிநேரத்தில் அதிதீவிரமடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை எப்படியும் தொடங்கிவிடும் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறியது. இந்த புயலுக்கு பைபர்ஜாய் என பெயரிடப்பட்டுள்ளது. வங்கதேச நாடு இந்த பைபர்ஜாய் என்ற பெயரை வழங்கியது. இதற்கு ஆபத்து/ பேராபத்து/ பேரழிவு என அர்த்தம்.

அரபிக் கடலில் நிலை கொண்டிருக்கும் பைபர்ஜாய் புயல் தற்போது தீவிர புயலாக வலுவடைந்துள்ளது. இது அடுத்த 12 மணிநேரத்தில் அதிதீவிர புயலாக மேலும் வலுவடையும். இப்புயல் தற்போது அரபிக் கடலில் வடக்கு நோக்கி நகர்ந்து செல்கிறது.
பைபர்ஜாய் புயல் காரணமாக கேரளாவில் அடுத்து வரும் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கால கட்டத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழையும் தொடங்கும் என கருதப்படுகிறது.

அரபிக் கடல் புயல் மற்றும் தமிழ்நாட்டின் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆகியவற்றால் அடுத்த 2 நாட்களுக்கு பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம் . அதே நேரத்தில் தமிழ்நாட்டில் தொடர்ந்து வெப்பம் நீடிக்கும்; உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

தமிழ்நாடு புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக் கூடும்; தமிழக உட்பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை நிலவக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் வடக்கு கேரளா-கர்நாடகா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் தெற்கு அரபிக் கடல் பகுதிகளில் குளிர்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும். மத்திய கிழக்கு, மத்திய மேற்கு, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று 105 முதல் 115 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 125 கி.மீ. வேகத்திலும் வீசும். அரபிக் கடலின் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனே கரைக்கு திரும்ப வேண்டும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications