தொடரும் மிக்ஜாம் மீட்பு பணிகள்.. சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
டெல்லி: மிக்ஜாம் புயல் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையே சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் கடந்த ஞாயிறு முதலே கனமழை கொட்டியது. முதலில் ஞாயிறு இரவு விட்டு விட்டு மழை பெய்தது.

அதன் பிறகு திங்கள் இரவு ஆரம்பித்த மழை விடிய விடியக் கொட்டி தீர்த்தது. கனமழையால் தலைநகர் சென்னை மொத்தமாக முடங்கியது. திங்கள்கிழமை பல மணி நேரம் வரை விடாமல் கனமழை கொட்டிய நிலையில், முக்கிய சாலைகளிலும் நீர் தேங்கியது.
மிக்ஜாம்: இந்த மிக்ஜாம் புயல் திங்கள் இரவு சென்னையில் இருந்து சற்று விலகிச் சென்றது. அதன் பின்னரே மீட்புப் பணிகள் வேகம் பெற்றது. கடல் சீற்றம் காரணமாக வெள்ள நீரைக் கடல் உள்வாங்காத நிலையில், பல இடங்களில் நீர் தேங்கியது. புயல் தள்ளிச் சென்ற பிறகே ஆற்று நீர் கடலில் சென்று கலக்கத் தொடங்கியது. மழையும் நின்ற நிலையில், உடனடியாக மீட்புப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டது.
நேற்றைய தினம் பல முக்கிய இடங்களில் மழை நீர் வடிந்துவிட்டது. உட்புற பகுதிகளில் மட்டுமே வெள்ள நீர் இருந்தது. அதையும் அகற்ற படுவேகமாக பணிகள் நடந்து வருகிறது. இன்றை மாலைக்குள் பெரும்பாலான இடங்களில் மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
பொது விடுமுறை: இந்த கனமழை காரணமாக ஏற்கனவே திங்கள் மற்றும் செவ்வாய் என இரண்டு நாட்களும் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், தனியார் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்கப்படும் அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: நேற்றைய தினமே மழை விட்ட நிலையில், மீட்புப் பணிகள் படுவேகமாக நடந்து வருகிறது. இதற்கிடையே மிக்ஜாம் தாக்கம் காரணமாக இன்று மொத்தம் 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குத் தமிழ்நாடு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கனமழை காரணமாகக் கடந்த இரண்டு நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், மூன்றாவது நாளாக இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications