டாடா நிறுவன சேர்மனாக சந்திரசேகரன் நியமிக்கப்பட்டது சட்ட விரோதம்.. வெளியான அதிரடி உத்தரவு
டெல்லி: டாடா நிறுவன தலைவராக சந்திரசேகரன் நியமிக்கப்பட்டது சட்டவிரோதமானது தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு ஆணையம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மீண்டும் டாடா நிறுவன தலைவராக சைரஸ் மிஸ்திரியை நியமிக்கவும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டாடா நிறுவன சேர்மனாக சைரஸ் மிஸ்திரி பதவியேற்று நான்கு ஆண்டுகள் ஆகிய நிலையில், 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரத்தன் டாட்டா அவரை அந்த பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். இதற்கு பதிலாக சந்திரசேகரன் அந்த பதவியில் நியமிக்கப்பட்டார்.
இந்த முடிவை சைரஸ் மிஸ்திரி ஏற்கவில்லை. தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு ஆணையத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்து வந்த இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று தனது தீர்ப்பை வழங்கியது.
இதன்படி சைரஸ் மிஸ்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டது செல்லாது என்றும், மீண்டும் அவரையே சேர்மனாக நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது நிறுவனமாக இருந்ததை தனியார் நிறுவனமாக டாடா சன்ஸ் மாற்றியது சட்டத்துக்கு விரோதமானது என்றும் தீர்ப்பில் இரு நீதிபதிகள் அமர்வு கூறியுள்ளது.
தேசிய கம்பெனிகள் சட்டம் மேல்முறையீடு ஆணையத்தின் இந்த தீர்ப்பை என்னும் நான்கு வாரங்களில் டாட்டா குழுமம் அமல்படுத்த வேண்டும். இருப்பினும் இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய ரத்தன் டாடாவுக்கு வாய்ப்பு திறந்தே இருக்கிறது.
சால்ட் முதல் சாப்ட்வேர் தொழில் வரை டாடா குழுமத்தின் கீழ் உள்ளது. இந்த தீர்ப்பு காரணமாக அதன் சந்தை மதிப்பு பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில், அந்த நிறுவனத்தின் தலைமை தற்போது கேள்விக்குறியான நிலையில் உள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் டாடா குழுமத்தில் முதலீடு செய்வதற்கான ஆர்வம் குறையும் வாய்ப்பு இருப்பதாக சந்தை பொருளாதார வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
தீர்ப்பு இன்று வெளியான நிலையில் சில நிமிடங்களிலேயே பங்குச் சந்தைகளில் டாடா மோட்டார்ஸ் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென குறைய தொடங்கியது இதற்கு ஒரு உதாரணம்.