மிதந்து புதைந்த பிணங்கள்.. வடமாநிலங்களையே புரட்டிப்போட்ட வரலாறு காணாத மழை! பலி 37 ஆக உயர்வு
டெல்லி: வட மாநிலங்களில் ஏற்பட்ட வரலாறு காரணமாக மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்து உள்ளது.
தலைநகர் டெல்லி, இமாச்சல பிரதேசம், அரியானா, பஞ்சாப், சண்டிகர், ராஜஸ்தான், உத்தராகண்ட், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்கள் கடந்த 3 நாட்களாக வரலாறு காணாத மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இன்றும் பல மாநிலங்களுக்கு ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட் மற்றும் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டெல்லியில் கடந்த 8 ஆம் தேதி கனமழை கொட்டித் தீர்த்தது. கடந்த 9 ஆம் தேதி காலை 8.30 மணி நிலவரப்படி டெல்லியில் 24 மணி நேரத்தில் 153 மில்லி மீட்டர் மழை கொட்டித்தீர்த்து உள்ளது. கடந்த 1982 ஆம் ஆண்டுக்கு பிறகு கொட்டித் தீர்த்த இந்த பெரு மழையிக்கு பிறகு டெல்லியில் ஜூலை மாதம் பொழியும் அதிகபட்ச மழை அளவு இதுவாகும்.
பஞ்சாப் மற்றும் அரியானா மாநில தலைநகரும், யூனியன் பிரதேசமாகவும் இருக்கும் சண்டிகரும் பெரு மழை வெள்ளத்தில் முழ்கி இருக்கிறது. 8 ஆம் தேதிகாலை 8.30 மணி முதல் 9 ஆம் தேதி காலை 8.30 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் சண்டிகரில் 322 மிமீ மழை பதிவானது. சண்டிகரில் வீடுகள், கட்டிடங்களும் நீரில் மூழ்கியுள்ளன.
மலைகளின் மாநிலமான இமாச்சல பிரதேசத்தின் முக்கிய சுற்றுலா தளங்களான மனாலி, குழு உள்ளிட்ட இடங்களில் கொட்டித்தீர்த்த உச்சபட்ச மழையால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு உள்ளன. மலை பாதைகள் மண்ணில் புதைந்து உள்ளன. முக்கிய பாலங்கள் நீரில் மூழ்கி இருக்கின்றன. இரும்பு பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இதன் காரணமாக அம்மாநிலத்தில் போக்குவரத்து பெரிதளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட பெரு மழையின் காரணமாக ஏராளமான வீடுகளும் கட்டிடங்களும் இடிந்து விழுந்தன. மலைச் சரிவுகளிலும், மழை வெள்ளத்திலும் வாகனங்கள் சிக்கும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
அதேபோல் லடாக்கிலும் 9 மணி நேரத்தில் 145 மிமீ கனமழை கொட்டித் தீர்த்த காரணத்தால் பழமையான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அதேபோல் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களின் பல பகுதிகளிலும் கனமழை கொட்டித்தீர்த்ததால் வெள்ளம் சூழ்ந்துள்ளன. அங்குள்ள மலைப்பகுதிகளிலும் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு உள்ளன.
அதேபோல் பஞ்சாப், அரியானா மாநிலங்களிலும் தொடர்ந்து 3 வது நாளான கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் அந்த மாநிலங்களிலும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் மழை பாதிப்பு அதிகளவில் உள்ளது.
வட மாநிலங்களில் கடந்த 3 நாட்களாக கொட்டித் தீர்த்த பெரு மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்து உள்ளது. இதில் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 9 பேர் உயிரிழந்து உள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications