ராணுவ வீரர்களை விடாமல் தாக்கும் கொரோனா.. இதுவரை எத்தனை வீரர்கள் தடுப்பூசி பெற்றனர் தெரியுமா?
டெல்லி: ராணுவ வீரர்களில் 99% பேர் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி பெற்றுள்ளனர் என்றும் சுமார் 75% ராணுவ வீரர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியா முழுவதும் கொரோனாவின் முகம் மீண்டும் மக்களை படுத்தி எடுத்து வருகிறது. உலக நாடுகள் எங்கிலும் இல்லாத வகையில் தினமும் 3,00,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
நாட்டில் கொரோனா நோயாளிகள் தினமும் பெருகி வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைக்கு தட்டுப்பாடு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முக்கியமாக பயன்படும் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை, அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு என்று இந்தியா ஒரு நெருக்கடி நிலையை சந்தித்து வருகிறது.

மோசமான நிலையில் நாடு
நாட்டின் நிலைமை மிக மோசமாக உள்ளதால் கொரோனா தடுப்பு பணியில் ராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆக்சிஜன் தேவைப்படும் இடங்களுக்கு இந்திய விமானப்படை விமானம் மூலம் ஆக்சிஜன் கொண்டு செல்லப்படுகிறது. இது தவிர பல்வேறு கொரோனா தடுப்பு பணிகளில் முப்படை வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ வீரர்களும் தொடக்கம் முதலே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

ராணுவ வீரர்கள் பாதுகாப்பு
இந்த வார தொடக்கத்தின் படி இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் 1,000 க்கும் மேற்பட்ட வீரர்கள் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் ஆயுதப்படை ராணுவ வீரர்கள் மட்டும் 650 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். இதுவரை 44,000 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 120-க்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். 43,000 பேர் குணமடைந்துள்ளனர்.

ராஜ்நாத் சிங் அனுமதி
ராணுவ துறைகளில் தொடர்ந்து பாதிப்புகள் அதிகரித்து வந்ததால் ராணுவ வீரர்களின் மருத்துவ சேவைகளுக்கு அவசர நிதி அதிகாரங்களை வழங்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அனுமதி அளித்தார். அதன்படி லெப்டனட் ஜெனரல் ரேங்க் அதிகாரிகளுக்கு ரூ .5 கோடி வரை நிதி உதவிகளும், மேஜர் ஜெனரல் மற்றும் பிரிகேடியர் தரவரிசை அதிகாரிகளுக்கு முறையே ரூ.3 கோடி மற்றும் ரூ 2 கோடிக்கான நிதியுதவியும் செய்யப்பட்டுள்ளது.

வீரர்களுக்கு தடுப்பூசிகள்
மேலும் வீரர்கள் சிகிச்சை பெற வசதியாக டெல்லி கன்டோன்மென்ட்டில் உள்ள 350 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை 1000 படுக்கைகள் கொண்ட பிரத்யேக கொரோனா சிகிச்சை மருத்துவமனையாக மாற்ற ராணுவம் முடிவு செய்துள்ளது. ராணுவ வீரர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. ராணுவ வீரர்கள், பணியாளர்கள் உள்பட 99% பேர்(15.5 லட்சம் வீரர்கள்) முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி பெற்றுள்ளனர் என்றும் சுமார் 75% ராணுவ வீரர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications