டெல்லியில் மோசமடையும் நிலைமை.. காற்று மாசு தீவிரம்! மூச்சு திணறலால் மக்கள் பாதிப்பு
டெல்லி: தீபாவளி தொடங்கி டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து மோசமான நிலையில் நீடித்து வருகிறது. காற்று மாசு காரணமாக மக்கள் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இன்று காலை காற்றின் தரம் 359 ஆக பதிவாகியிருக்கிறது.
இதற்கு முன்னர் ஞாயிற்றுக்கிழமை 377 ஆகவும், சனிக்கிழமை 386 ஆகவும் இருந்த காற்று மாசின் அளவு, இன்று காலை சற்று குறைந்திருந்தாலும், இன்னமும் காற்று மாசின் அளவு கவலைக்குரியதாகவே இருக்கிறது.

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் 'சமீர்' செயலியின் தரவுகளின்படி, டெல்லியில் உள்ள 39 கண்காணிப்பு நிலையங்களில் ஆறு நிலையங்களில் காற்றின் தரக்குறியீடு 'கடுமையான' பிரிவில் பதிவாகியுள்ளது. பாவனாவில் 427 ஆகப் பதிவாகி மிகவும் மோசமான நிலையைக் காட்டுகிறது. DTU (402), ஜஹாங்கிர்புரி (406), நரேலா (406), ரோகிணி (404), வசீர்பூர் (402) ஆகிய பகுதிகளிலும் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது.
காற்று மாசு குறியீட்டில் 0 முதல் 50 என்று இருந்தால், அங்கு காற்று சுத்தமாக இருக்கிறது என்று அர்த்தம். 51 முதல் 100 எனில் திருப்திகரமான நிலை என்று அர்த்தம். 101 முதல் 200 'மிதமானது' என்றும், 201 முதல் 300 'மோசமானது' என்றும், 301 முதல் 400 'மிகவும் மோசமானது' என்றும், 401 முதல் 500 'கடுமையானது' என்றும் வகைப்படுத்தப்படுகிறது. லோதி சாலை (226) மற்றும் என்.எஸ்.ஐ.டி துவாரகா (225) என காற்று மாசு பதிவாகியிருக்கிறது.
என்சிஆர், காசியாபாத்தில் காற்றின் தரக்குறியீடு 395 ஆக இருக்கிறது. கிரேட்டர் நொய்டாவில் 386, நொய்டாவில் 361 என காற்று மாசு பதிவாகியிருக்கிறது. வெப்பநிலையை பொறுத்தவரை, டெல்லியில் நேற்று 9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 4.5 டிகிரி குறைவு என்றும், கடந்த மூன்று ஆண்டுகளில் நவம்பர் மாதத்தில் பதிவான மிகக் குளிரான நாள் இது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications