ஒரு நாள், 2 நாள் அல்ல.. மார்ச் 31 வரை பள்ளிகளுக்கு விடுமுறை.. கொரோனா பீதியால் டெல்லி அரசு அறிவிப்பு
டெல்லி: ஒன்றல்ல, இரண்டல்ல, மார்ச் 31-ஆம் தேதி வரை டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது அம்மாநில அரசு. கொரோனா வைரஸ் பாதிப்பு பரவி விடக்கூடாது என்ற முன் எச்சரிக்கைதான் இதற்கு காரணம்.
இந்தியாவில் இதுவரை 30 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இந்தியா மக்கள் தொகை பெருக்கம் அதிகம் உள்ள ஒரு நாடு. எனவே இப்போது இருந்தே கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால்தான் அந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்பதில் அரசு தெளிவாக இருக்கிறது.

இதை அடுத்துதான் ஹோலி பண்டிகையைக் கொண்டாடப் போவதில்லை என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில்தான், டெல்லி மாநில அரசு இன்று ஒரு முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது. அம்மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா அளித்த பேட்டியில், ஐந்தாம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளிகளும் நாளை முதல் மார்ச் 31ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். அரசு மட்டுமின்றி தனியார் பள்ளிகளுக்கும் உத்தரவு பொருந்தும் என்று தெரிவித்துள்ளார்.
அதாவது சுமார் ஒரு மாத காலத்துக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. தேர்வு மாதமான மார்ச்சில் அளிக்கப்பட்டுள்ள இந்த விடுமுறை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பொதுவாக தேர்வு காலங்களில் தொடர்சியாக பள்ளிகள் நடத்தப்படுவது கிடையாது. சில நாட்கள் விட்டுவிட்டு கூட பள்ளிகள் நடைபெறும். மேலும் இந்த மாதத்துடன் தேர்வை நடத்தி விட்டு கோடை விடுமுறையை கூட அறிவித்து இருக்க முடியும். அப்படி இருந்தும் எந்த ஒரு ரிஸ்க்கிற்கும் இடம் கொடுக்கக் கூடாது என்பதில், அரசு தெளிவாக இருக்கிறது. எனவே தான் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications