காங்கிரஸ் தான் அதிகம்.. டெல்லி தேர்தலில் பாஜக, ஆம்ஆத்மியை பின்னுக்கு தள்ளிய ‛கை’.. எதில் தெரியுமா?
டெல்லி: வாரிசு அரசியலுக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் பாஜக மற்றும் ஆம்ஆத்மி டெல்லி சட்டசபை தேர்தலில் தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளது. இந்த தேர்தலில் பாஜக, ஆம்ஆத்மி கட்சிகள் சார்பில் வாரிசுகள் களமிறக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இந்த வாரிசு அரசியலில் காங்கிரஸ் தான் டாப்பில் உள்ளது. அதாவது டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக, ஆம்ஆத்மியை விட காங்கிரஸ் தான் அதிக வாரிசுகளுக்கு சீட் வழங்கி உள்ளது. கட்சி வாரியாக எத்தனை வாரிகள் போட்டியிடுகின்றனர்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 5ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை பிப்ரவரி 8 ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் ஆம்ஆத்மி, எதிர்க்கட்சியான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.

வேட்பு மனுத்தாக்கல் முடிவடைந்த நிலையில் இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது. கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். மக்களின் மனதை கவரும் வகையில் கட்சிகள் சார்பில் முக்கியமான தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
வாரிசு அரசியல்
ஒவ்வொரு சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல் வரும்போதும் முக்கியமான ஒரு குற்றச்சாட்டு என்பது வரும். அது என்னவென்றால் வாரிசு அரசியல். இந்த வாரிசு அரசியல் என்பது டெல்லி சட்டசபை தேர்தலையும் விட்டு வைக்கவில்லை. கட்சிகள் போட்டி போட்டு வாரிசுகளை வேட்பாளராக களமிறக்கி உள்ளன. அந்த வகையில் டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் அதிக வாரிசுகள் களமிறக்கப்பட்டுள்ளன.
காங்கிரஸில் மொத்தம் 8 வாரிசுகள் போட்டியிடுகின்றன. இதற்கு அடுத்தப்படியாக ஆம்ஆத்மியில் 6 வாரிசுகளும், பாஜகவில் 3 வாரிசுகளும் களமிறக்கப்பட்டுள்ளன. ஆம்ஆத்மி மற்றும் பாஜக கட்சிகள் மேடைக்கு மேடை வாரிசு அரசியலுக்கு எதிராக பேசி வந்தாலும் கூட டெல்லி சட்டசபை தேர்தலில் வாரிசுகளுக்கு டிக்கெட் வழங்கி உள்ளன.
காங்கிரஸ்
கட்சி வாரியாக பார்த்தால் காங்கிரஸ் கட்சியில் 8 வாரிசுகளுக்கு தேர்தலில் சீட் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நியூ டெல்லி தொகுதியில் ஆம்ஆத்மி கட்சி வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்சித்தின் மகன் சந்தீப் தீக்சித் காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார். அதேபோல் சாந்தினி சவுக் தொகுதியில் முன்னாள் எம்பி ஜேபி அகர்வாின் மகன் முதித் அகர்வால், துவாரகா தொகுதியில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் ஆதர்ஷ் சாஸ்திரி, ஆதர்ஷ் நகரில் முன்னாள் எம்எல்ஏ மான்கட் ராம் சிங்ஹால் மகன் சிவான்க் சிங்கால் களமிறங்கி உள்ளார்.
ஜன்புரா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தாஜ்தார் பாபரின் மகன் பர்ஹத் சூரி, பாபர்பூர் தொகுதியில் பரிதாபாத் முன்னாள் எம்பி அவதார் சிங்கின் மகன் அர்ஜுன் பதானா, ஒக்லா தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ முகமது கானின் மகன் அரிபா கான், முஸ்தபாபாத் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ அலி ஹாசன் மெஹந்தியின் மகன் அலி மெஹந்தி என 8 வாரிசுகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆம்ஆத்மி
ஆம்ஆத்மி கட்சியை எடுத்து கொண்டால் மடியா மஹால் தொகுதியில் தற்போது எம்எல்ஏவாக இருக்கும் சோயிப் இக்பாலுக்கு பதில் அவரது மகன் அலே இக்பாலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணா நகர் தொகுதியில் எம்எல்ஏவாக உள்ள எஸ்கே பாகாவுக்கு பதில் அவரது மகன் விகாஷ் பாகா களமிறங்கி உள்ளார். சாந்தினி சவுக் தொகுதியில் இப்போது எம்எல்ஏவாக உள்ள பிரகலாத் சிங்கின் மகன் புரன்தீப் சிங் சாவ்னி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் உத்தவ் நகரின் தற்போது எம்எல்ஏவாக உள்ள நரேஷ் பயல்வான் என்பவரின் மனைவி பூஜா பயில்வான் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். சீலம்பூர் தொகுதியில் மன்னாள் எம்எல்ஏ மதீன் அகமது என்பவரின் மகன் சவுத்ரி ஜுபைர் அகமது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். துவாரகா தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ, எம்பியாக இருந்த மகாபால் மிஸ்ராவின் மகன் விஜய் குமார் மிஸ்ரா களமிறங்கி உள்ளார்.
பாஜக
பாஜகவை எடுத்து கொண்டால் 3 வாரிசுகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி முன்னாள் முதல்வர் சாஹிப் சிங் வர்மானின் மகன் பர்வேஷ் வர்மா நியூடெல்லி தொகுதியில் களமிறங்கி உள்ளார். இந்த தொகுதியில் ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார்.
அதேபோல் மோடி நகரின் முன்னாள் எம்எல்ஏ மதன் லால் குரானாவின் மகன் ஹரிஸ் குரானாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டெல்லி கண்டோன்மென்ட் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ கரண் சிங் தன்வாரின் மகன் புவன் தன்வார் பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications