"ஆம் ஆத்மி vs பாஜக.." டெல்லியை பிடிக்க கடும் போட்டி.. இன்று தொடங்குகிறது வேட்புமனு!
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேசத்திற்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே டெல்லி சட்டசபைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
தேசிய தலைநகரான டெல்லி யூனியன் பிரதேசத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி கட்சி தான் ஆட்சியில் உள்ளது. அங்கு இப்போது ஆம் ஆத்மியின் அதிஷி முதல்வராக இருக்கிறார்.

டெல்லி சட்டசபைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அங்கு வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
டெல்லி தேர்தல்:
டெல்லியைப் பொறுத்தவரை அங்கு இப்போது ஆளும் கட்சியான காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. அங்கு எப்படியாவது தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என்ற முனைப்பில் ஆம் ஆத்மி களமிறங்குகிறது. அதேநேரம் ஆம் ஆத்மியை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் பாஜக இறங்குகிறது. இது தவிரக் காங்கிரஸ் கட்சியும் கூட அங்குக் களத்தில் உள்ளது. இந்தியா கூட்டணியில் உடன்பாடு ஏற்படாத சூழலில், ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் அங்குத் தனித்தே போட்டியிடும் எனத் தெரிகிறது.
வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்:
இதற்கிடையே டெல்லி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. டெல்லி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் வரும் ஜனவரி 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜனவரி 18ம் தேதி நடைபெறும் நிலையில், வேட்புமனுவைத் திரும்பப் பெற ஜனவரி 20ம் தேதி கடைசி நாளாகும்.
இதுதான் பாஜகவின் "மிஷன் டெல்லி.." 300 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதம்தோறும் உதவி தொகை!
டெல்லி களநிலவரம் என்ன:
டெல்லி தேர்தலைப் பொறுத்தவரை அங்கு ஆம் ஆத்மி தான் கடந்த இரு தேர்தல்களிலும் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்திருந்தது. கடந்த 2020ல் நடந்த தேர்தலில் அங்கு மொத்தமுள்ள 70 இடங்களில் 62 இடங்களில் ஆம் ஆத்மி வென்றிருந்தது. மேலும், மொத்தம் பதிவான வாக்குகளில் சுமார் 53% வாக்குகள் ஆம் ஆத்மி கட்சிக்கு வந்திருந்தது.
பாஜக அங்கு 62 இடங்களில் போட்டியிட்ட நிலையில், சுமார் 38% வாக்குகளைப் பெற்றிருந்தது. இருப்பினும், அக்கட்சியால் வெறும் 8 இடங்களில் மட்டுமே பாஜகவால் வெல்ல முடிந்தது. 2014க்கு முன்பு சுமார் 15 ஆண்டுகள் அங்கு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியால் அங்கு ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. இந்த முறையும் கூட அங்கு ஆம் ஆத்மி, பாஜக இடையே தான் போட்டி நிலவுகிறது.












Click it and Unblock the Notifications