இதுதான் பாஜகவின் "மிஷன் டெல்லி.." 300 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதம்தோறும் உதவி தொகை!
டெல்லி: தேசிய தலைநகரான டெல்லியில் அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ள நிலையில், பாஜக அங்குப் பல இலவச வாக்குறுதிகளை அளிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம், உரிமை தொகை போல மாதாமாதம் பெண்களுக்கு ரொக்கம் அளிக்கும் திட்டத்தை பாஜக அறிவிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி யூனியன் பிரதேசத்தில் இப்போது ஆம் ஆத்மி ஆட்சியில் இருக்கிறது. டெல்லி முதல்வராக அதிஷி இருக்கும் சூழலில், அங்குச் சட்டசபைத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அங்கு வரும் பிப்ரவரி 5ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
300 யூனிட் இலவச மின்சாரம்:
தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், அங்கு பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. அங்கு ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மியை எப்படியாவது வீழ்த்தியே தீர வேண்டும் என்ற முனைப்பில் பாஜக இறங்கியுள்ளது. இதற்கிடையே ஆம் ஆத்மி கட்சிக்கு கடும் போட்டி தரும் வகையில் பாஜகவும் பல இலவச வாக்குறுதிகளை வாரி வழங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக டெல்லி மக்களுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம், இலவச குழாய் நீர் இணைப்பு உள்ளிட்டவற்றை பாஜக தங்கள் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக வெளியிட உள்ளது.
குறிப்பாகப் பெண் வாக்காளர்களைக் கவர ஆம் ஆத்மி அங்கு ஏற்கனவே உரிமை தொகையைப் போல மகிளா சம்மன் யோஜனா திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கும் நிலையில், அதற்குப் பதிலடியாக அதேபோன்ற திட்டத்தை பாஜகவும் அறிவிக்கக்கூடும் என்று டெல்லி பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.. இது மட்டுமின்றி கோவில்கள் மற்றும் குருத்வாராக்கள் போன்ற மத வழிபாட்டுத் தலங்களுக்கு 500 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கவும் பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உரிமை தொகை:
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் உரிமை தொகை திட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருந்ததால், மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் லட்லி பெஹ்னா என்ற பெயரில் இதேபோல குடும்பத் தலைவிகளுக்கு நேரடியாகப் பணத்தைக் கொடுக்கும் திட்டத்தை பாஜக அறிவித்துள்ளது.. இது பெண்களின் வாக்குகளைத் திரட்ட முக்கியமானதாக இருக்கிறது. எனவே, அதேபோன்ற ஒரு அறிவிப்பை டெல்லி தேர்தலுக்கும் பாஜக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக:
டெல்லியைப் பொறுத்தவரை அங்கு ஆம் ஆத்மிக்கும் பாஜகவுக்கும் இடையே தான் நேரடி மோதல்.. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கும் ஆம் ஆத்மிக்கு மகிளா சம்மன் யோஜனா திட்டம் தான் பிரதானமாக இருக்கிறது. . இத்திட்டத்தின் கீழ், டெல்லியில் உள்ள பெண்களுக்கு தற்போது ரூ.1,000 வழங்கப்படுகிறது.
ஆம் ஆத்மி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தால் இந்த தொகை ரூ.2,100 ஆக உயர்த்தப்படும் என்று அக்கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. மேலும், 60 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு இலவச மருத்துவ வசதி அளிக்கும் 'சஞ்சீவனி யோஜனா' என்ற திட்டத்தையும் ஆம் ஆத்மி அமல்படுத்தும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications