தெக்கத்தி சீமை சிவகாசிக்கு டெல்லி அனுப்பிய வெரி பேட் நியூஸ்! தீபாவளி பட்டாசு வெடிக்க மீண்டும் தடை!
டெல்லி: காற்று மாசுபாட்டை காரணமாக வைத்து இந்த ஆண்டும் டெல்லியில் தீபாவளி பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 2023-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி வரை பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டு தீபாவளிக்குப் பின்னர் டெல்லியில் காசு மாசுபாடு அதிகரிக்கிரது என்பது நீண்டகால சர்ச்சை. இதனால் டெல்லியில் சில ஆண்டுகளாக பட்டாசுகள் வெடிக்க தடை அமல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2020-ம் ஆண்டு டெல்லியில் தீபாவளி கொண்டாட்டங்களின் போது பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டது. இத்தடையை அப்போது அமல்படுத்துவதில் சிக்கல் எழுந்தது. ஏனெனில் பட்டாசு விற்பனை நடைபெற்றுக் கொண்டிருந்தது; பொதுமக்களும் பட்டாசுகள் வெடித்து கொண்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து தீபாவளிக்கு சற்று முன்னதாக பட்டாசுகள் வெடிக்க தடை என்கிற அறிவிப்பு வெளியிடப்படுவது வழக்கமாகிவிட்டது. இந்த ஆண்டு அடுத்த மாதம் 24-ந் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முன்னரே இப்போதே டெல்லி அரசு பட்டாசுகள் வெடிக்க தடை என அறிவித்துவிட்டது. டெல்லியில் 4-வது ஆண்டாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக டெல்லி அமைச்சர் கோபால் ராய் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: டெல்லியில் பட்டாசு தயாரிப்பு, விற்பனை மற்றும் பயன்படுத்துதல் என்பவை 2023-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி வரை தடை செய்யப்படுகிறது. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் பட்டாசுகள் விற்பனைக்கும் இந்த தடை பொருந்தும். டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம், டெல்லி போலீசார் இணைந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வர். இவ்வாறு அமைச்சர் கோபால் ராய் கூறியுள்ளார்.
டெல்லியைத் தொடர்ந்து ராஜஸ்தான் உள்ளிட்ட சில வடமாநிலங்களும் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கக் கூடும். இது பட்டாசு தொழிலை மட்டும் நம்பி இருக்கும் தமிழ்நாட்டின் சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளை கடுமையாக பாதிக்கும். சிவகாசி சுற்று வட்டாரங்களில் சிறியதும் பெரியதுமாக சுமார் 1,500க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக வட இந்திய மாநிலங்கள் இப்படி பட்டாசுகள் வெடிக்க தடை விதிப்பதால் தங்களது வாழ்வாதாரம் மிகப் பெரும் கேள்விக்குறியாகிவிட்டது என்பது சிவகாசி சுற்றுவட்டார மக்களின் பெரும் கவலை.












Click it and Unblock the Notifications