அரசு பள்ளிகளை தரம் உயர்த்த மத்திய அரசு புது திட்டம்.. கெஜ்ரிவால் சரமாரி கேள்வி! மோடிக்கு கடிதம்
டெல்லி: நாடு முழுவதும் 14000 அரசுப் பள்ளிகள் சர்வதேச தரத்துக்கு மேம்படுத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆசிரியர் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, எழுச்சிமிகு இந்தியாவிற்கான பிரதமரின் பள்ளிகள் திட்டத்தின் கீழ் 14 ஆயிரத்து 500 பள்ளிகள் மேம்படுத்தப்படுவதாக அறிவித்தார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், எழுச்சிமிகு இந்தியாவிற்கான பிரதமரின் பள்ளிகள் திட்டத்தின் கீழ் 14 ஆயிரத்து 500 பள்ளிகள் மேம்படுத்தப்படும் என்று மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். புதிய தேசிய கல்விக் கொள்கையின் விளைவாக இப்பள்ளிகள் நவீனப்படுத்தப்படும்.
பாஜகவில் இருங்கள்.. ஆனால் ஆம் ஆத்மிக்காக வேலை பாருங்க.. புது ரூட்டில் அரவிந்த் கெஜ்ரிவால்!
நவீனபடுத்தப்படும் பள்ளிகள்
இதன் மூலம் பள்ளிகள் நவீனப்படுத்தப்பட்டு கல்வி முறையில் பெரும் மாற்றம் கொண்டு வரப்படும். கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி சார்ந்த கற்றலை மையமாகக் கொண்ட கற்பித்தல் முறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். புதிய தொழிற்நுட்பம், நவீன வகுப்பறைகள், விளையாட்டு மற்றும் பலவற்றை உள்ளடக்கிய நவீன உள்கட்டமைப்புகளிலும் கவனம் செலுத்தப்படும்.
தேசிய கல்விக் கொள்கை
அண்மை காலங்களில் தேசிய கல்விக் கொள்கை மூலம் கல்வித்துறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையின் விளைவாக எழுச்சிமிகு இந்தியாவிற்கான பிரதமரின் பள்ளிகள் திட்டத்தின் கீழ் இப்பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் நாடு முழுவதும் பயனடைவார்கள் என்று பதிவிட்டிருந்தார்.
அமைச்சரவை ஒப்புதல்
இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் 14,000 பள்ளிகளை ரூ.27,360 கோடி செலவில் எழுச்சிமிகு இந்தியாவிற்கான பிரதமரின் பள்ளிகளாக தரம் உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தின்கீழ், கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகள் உட்பட 14,000 க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகள் மேம்படுத்தப்பட்ட பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பங்கு எவ்வளவு?
5 ஆண்டுகளுக்கு மொத்த திட்டத்தின் செலவு ரூ.27,360 கோடியாக இருக்கும் எனவும், அதில் மத்திய அரசின் பங்கு ரூ.18,128 கோடியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டில் 14,000 பள்ளிகளை நவீனப்படுத்துவதன் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். அதேபோல் தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக ஏற்றுக்கொண்ட மாநிலங்களில் உள்ள பள்ளிகள் மட்டுமே, இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை
மத்திய அரசின் இந்த திட்டம் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் உள்ள 10 லட்சம் அரசு பள்ளிக்கூடங்களை தரம் உயர்த்துவதற்கு அனைத்து மாநிலங்களையும் கலந்தாலோசனை செய்து ஒரு திட்டத்தை தயார் செய்ய வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான, இலவச கல்வியை உறுதி செய்யாமல் உலகின் நம்பர் 1 நாடாக இந்தியா ஆக முடியாது.
இந்தியாவில் தினமும் 27 கோடி மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு செல்கிறார்கள். அவர்களில் 18 கோடி பேர் அரசு பள்ளிக்கூடங்களுக்கு போகிறார்கள். 80 சதவீத அரசு பள்ளிக்கூடங்களின் நிலைமை, குப்பைக்கிடங்குகளை விட மோசமாக உள்ளது.
100 ஆண்டுகள்
14 ஆயிரம் பள்ளிக்கூடங்களை நவீனமயம் ஆக்குவது பற்றி அறிவித்திருக்கிறீர்கள். ஆனால் நாம் இந்த வேகத்தில் செயல்பட்டால், நமது அரசு பள்ளிக்கூடங்கள் அனைத்தையும் தரம் உயர்த்துவதற்கு 100 ஆண்டுகள் ஆகும். நாட்டில் உள்ள 10 லட்சம் அரசு பள்ளிக்கூடங்களையும் தரம் உயர்த்துவதற்கு ஒரு திட்டத்தை தயார் செய்யுங்கள் என்று தெரிவித்தார்.