கண் வைத்த அமலாக்கத்துறை.. டிமிக்கி காட்டும் அர்விந்த் கெஜ்ரிவால்! 3 முறையாக விசாரணைக்கு ஆஜராகவில்லை
டெல்லி: டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக இன்று ஆஜராக 3 வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ள நிலையில் அவர் ஆஜராகவில்லை என்ற தகவல் கிடைத்து உள்ளது.
டெல்லியில் ஆட்சி செய்து வரும் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசால் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து 32 மண்டலங்களாக டெல்லியை பிரித்து 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொண்டு வரப்பட்ட இந்த மதுபான கொள்கையில் ரூ.100 கோடிக்கும் மேல் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது.

அந்த கொள்கையில் இருந்த வரிக் குறைப்பு போன்ற முக்கிய சலுகைகள் குறித்த விபரங்கள் முன்கூட்டியே கசிய விடப்பட்டதாக புகார்கள் எழுந்தன. அதன் மூலம் மதுபான ஆலை அதிபர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டியதாக புகார்கள் வந்தன. இந்த விவரங்களை ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்கள் வெளியில் கசியவிட்டு பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து இது தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ள டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பரிந்துரை செய்தார்.
இதையடுத்து டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட 31 இடங்களில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டார்கள். மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவிடம் விசாரணை செய்த சிபிஐ அதிகாரிகள் டெல்லி தலைமை செயலகத்தில் உள்ள மணீஷ் சிசோடியாவின் அலுவலகத்திலும் சோதனை நடத்தினர்.
கடந்த 2023 பிப்ரவரி மாதம் மணீஷ் சிசோடியா சிபிஐயால் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து தனக்கு ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா உச்சநீதிமன்றத்தை நாடினார். பல முறை மணீஷ் சிசோடியா நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தும் தள்ளுபடி செய்யப்பட்டது. ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் அவர் தனது துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 11 மாதங்களாக அவர் விசாரணைக் கைதியாக சிறையில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலை இதே வழக்கில் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. முதல் சம்மனுக்கு கெஜ்ரிவால் ஆஜராகாத நிலையில், கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி அவருக்கு மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், கெஜ்ரிவால் அன்றும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. 2 வது முறையும் அவர் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், இன்று அவர் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்த நிலையில் இன்றும் அவர் ஆஜராகவில்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications