சிறையில் இருந்தபடியே முதல் ஆர்டரை போட்ட கெஜ்ரிவால்.. பரபரக்கும் டெல்லி அரசு! என்ன உத்தரவு தெரியுமா
டெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கெஜ்ரிவால் சிறையில் இருக்கும் நிலையில், சிறையில் இருந்தபடியே அவர் தனது முதல் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
டெல்லியில் கடந்த 2021-22 காலகட்டத்தில் புதிய மதுபான கொள்கை கொண்டு வரப்பட்டது. மது விற்பனையில் தனியாரை அனுமதிக்கும் இந்த கொள்கை குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்குச் சாதகமாக இருப்பதாகப் புகார்கள் எழுந்தன.

இதையடுத்து டெல்லி ஆளுநர் இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டார். அமலாக்கத் துறை இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நிலையில், ஆம் ஆத்மிக்கு இந்த வழக்கு பெரிய தலைவலியாக மாறி இருக்கிறது.
சிறையில் இருந்தபடி உத்தரவு: ஏற்கனவே மணிஷ் சிசோடியா இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு தான் ஓராண்டிற்கு மேலாகச் சிறையில் இருக்கிறார். இதற்கிடையே சமீபத்தில் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் இப்போது அமலாக்கத் துறை காவலில் இருக்கும் நிலையில், அங்கிருந்தபடி அவர் தனது முதல் உத்தரவை அரசுக்குப் பிறப்பித்துள்ளதாக ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த உத்தரவு நீர் அமைச்சகம் தொடர்பானது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரவு என்ன: அவர் இப்போது சிறையில் இருக்கும் நிலையில், அங்கிருந்தபடியே தனது உத்தரவை அனுப்பியதாகவும் ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து டெல்லி கல்வித் துறை அமைச்சர் அதிஷி இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து விளக்கினார். கெஜ்ரிவால் தனது உத்தரவில் டெல்லியில் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பகுதிகளில் போதுமான தண்ணீர் டேங்கர்களை அனுப்புமாறு கூறியிருக்கிறார்.
சிறையில் இருந்தாலும் கூட தன்னை பற்றி யோசிக்காமல் மக்களை பற்றி மட்டுமே யோசிப்பதாகவும் மக்கள் எந்தவொரு பிரச்சினையையும் எதிர்கொள்ளக் கூடாது என்பதில் கெஜ்ரிவால் உறுதியாக இருப்பதாகவும் அமைச்சர் அதிஷி தெரிவித்தார். அப்போது ஒரு கட்டத்தில் அவர் கண்ணீரும் விட்டார்.
கைது: மதுபான கொள்கை விவகாரத்தில் டெல்லியில் உள்ள சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் கடந்த மார்ச் 21ஆம் தேதி அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அதைத் தொடர்ந்து அன்று இரவே பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் மார்ச் 28 வரை அமலாக்கத் துறை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைதுக்குப் பிறகு கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அவர் ராஜினாமா செய்யவில்லை. சிறையில் இருந்தாலும் கெஜ்ரிவால் முதல்வராகவே தொடர்வார் என்று அவரது கட்சி வட்டாரங்கள் கூறின, அவர் தொடர்ந்து டெல்லி முதல்வராக இருப்பார் என்றும் தேவைப்பட்டால் அரசைச் சிறையில் இருந்து நடத்துவார் என்றும் அவரது கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.
பழிவாங்கல்: கடந்த சில நாட்களுக்கு முன்பு இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், "கெஜ்ரிவால் குற்றவாளி என்று நிரூபிக்கப்படவில்லை. அவரை அரசியல் ரீதியாகப் பழிவாங்க மட்டுமே சிறையில் வைத்துள்ளனர். இதனால் அவர் சிறையில் இருந்தாலும் தொடர்ந்து முதல்வராகச் செயல்படுவார். சிறையில் இருந்தே அரசை நடத்துவார்" என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.
ஒன் இந்தியா தளத்தில் இது தொடர்பாக வெளியாகியுள்ள பிற செய்திகள்:
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மதுபான கொள்கை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இது தொடர்பான கேள்விக்கு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே விரிவான ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளார். கெஜ்ரிவால் செயல்பாடுகளே அவர் இப்போது சிறையில் இருக்கக் காரணம் என்று அன்னா ஹாசாரே கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications