இடைக்கால ஜாமீனை 7 நாட்கள் நீட்டிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனு!
டெல்லி: தமக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதிய மனுத் தாக்கல் செய்துள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது. ஏற்கனவே டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தெலுங்கானா எம்.எல்.சி.யான கவிதாவும் கைது செய்யப்பட்டார். மேலும் ஆம் ஆத்மி கட்சியின் பெயரும் கூட டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கின் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது. இதனால் ஆம் ஆத்மி கட்சிக்கும் நெருக்கடி ஏற்பட்டது.

இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதேநேரத்தில் தாம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவது இல்லை எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தை நாடினார். உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் தர கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.
பின்னர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1-ந் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம். இடைக்கால ஜாமீனில் விடுதலையான அரவிந்த் கெஜ்ரிவால் லோக்சபா தேர்தல் பிரசார களத்தையே அதகளப்படுத்திவிட்டார். பாஜகவின் 75 வயதுக்கு மேல் யாருக்கும் பதவி தருவதில்லை; அதனால் பிரதமர் மோடி 2 ஆண்டுகள்தான் பதவியில் இருப்பார்; அதன் பின்னர் அமித்ஷாதான் நாட்டின் பிரதமர் என அரவிந்த் கெஜ்ரிவால் கொளுத்திப் போட்டது பெரும் பரபரப்பை கிளப்பி விட்டிருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த பிரசாரத்தால் பாஜக ரொம்பவே ஆடித்தான் போனது.
இந்த நிலையில் தமக்கு வழங்கப்பட்ட ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த மனு மீது உச்சநீதிமன்றம் விரைவில் விசாரணை நடத்த இருக்கிறது.












Click it and Unblock the Notifications