வெளிவரும் பூதம்? அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 6 நாள் அமலாக்கத்துறை காவல்.. டெல்லி சிறப்பு நீதிமன்றம் அதிரடி
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வரும் 28 ம் தேதி வரை 6 நாட்கள் அமலாக்கத்துறை காவல் வழங்கி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் டெல்லி மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. சிபிஐ சம்மன் அனுப்பிய நிலையில் கடந்த ஆண்டு கெஜ்ரிவால் ஆஜராகி சிபிஐயிடம் விளக்கம் அளித்தார்.

அதேபோல் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த முயன்றது. தொடர்ந்து சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. 9 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இந்நிலையில் தான் நேற்று இரவு அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து ஆம்ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்‛இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்களும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் இத்தகைய செயல் என்பது பாஜகவின் அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை என ‛இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தான் கைதான அரவிந்த் கெஜ்ரிவாலிடம் முக்கிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் மனு செய்யப்பட்டது. அதனை ஏற்ற நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் வரும் 28 ம் தேதி வரை 6 நாட்கள் விசாரிக்க அனுமதி வழங்கினார்.
இதன்மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று முதல் அடுத்த 6 நாட்கள் அமலாக்கத்துறை கஸ்டடிக்கு செல்ல உள்ளார். இந்த வேளையில் டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக ஏராளமான கேள்விகளை அமலாக்கத்துறையினர் கெஜ்ரிவாலிடம் கேட்க உள்ளனர். இதில் ஏதேனும் தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் அது இந்த வழக்கில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும். இதனால் அமலாக்கத்துறையினர் இந்த 6 நாட்களிலும் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் துருவி துருவி விசாரணை நடத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications