சிறையில் இருந்து வெளியே வருவாரா கெஜ்ரிவால்.. மதுபான கொள்கை வழக்கில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்!
டெல்லி: டெல்லி புதிய மதுபான கொள்கை விவகாரத்தில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைவதால் அவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட இருக்கிறார். அமலாக்கத் துறை வழக்கில் அவருக்கு ஏற்கனவே இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில், சிபிஐ வழக்கிலும் அவருக்கு ஜாமீன் கிடைக்கும் என்றே அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
தலைநகர் டெல்லியில் கடந்த 2021ம் ஆண்டு புதிய மதுபான கொள்கை கொண்டு வரப்பட்டது. இருப்பினும், இதில் முறைகேடு நடந்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டது.

முதலில் அமலாக்கத் துறை இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய நிலையில், விரைவில் சிபிஐ அமைப்பும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
கெஜ்ரிவால்: இந்த வழக்கு தான் ஆம் ஆத்மிக்கு மிக பெரிய தலைவலியாக மாறி இருக்கிறது. இந்த விவகாரத்தில் கைதான மணிஷ் சிசோடியா ஓராண்டிற்கு மேலாகச் சிறையில் இருக்கிறார். அதேபோல பிஆர்எஸ் தலைவர் கேசிஆரின் மகள் உள்ளிட்ட பலரும் கைதாகினர். குறிப்பாகக் கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்கத் துறை கெஜ்ரிவாலைக் கைது செய்தது. மேலும், மார்ச் 26ம் தேதி சிபிஐ அதிகாரிகளும் கெஜ்ரிவாலை கைது செய்தனர்.
சிறையில் இருந்தாலும் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. தொடர்ந்து சிறையில் இருந்தபடியே முதல்வராக பணியாற்றி வருகிறார். லோக்சபா தேர்தல் சமயத்தில் கெஜ்ரிவாலுக்கு பிரச்சாரம் செய்ய மட்டும் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. தேர்தல் முடிந்ததும் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமீன்: இதற்கிடையே மீண்டும் அவர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமலாக்கத் துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அதேநேரம் சிபிஐ அமைப்பும் கெஜ்ரிவாலைக் கைது செய்திருந்ததால் அவரால் சிறையில் இருந்து வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டது. சிபிஐ தொடர்ந்த வழக்கில் இன்று ஜூலை 25ம் தேதி வரை அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது.
இன்று ஆஜர்: இன்றுடன் நீதிமன்ற காவல் நிறைவடையும் நிலையில், இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார். கெஜ்ரிவால் உடல்நிலையைக் காரணமாகச் சொல்லி அவரது தரப்பு இன்று ஜாமீன் கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய தினம் அவருக்கு ஜாமீன் கிடைத்து சிறையில் இருந்து வெளியே வருவார் என்றே அவரது ஆதரவாளர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள். அதேநேரம் ஜாமீன் வழங்க சிபிஐ தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications