அமலாக்கத்துறைக்கு அல்வா கொடுத்த அரவிந்த் கெஜ்ரிவால்- 10 நாள் தியானமாம்- பஞ்சாப்பில் பதுங்கல்!
டெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆஜராக வேண்டும் என 2-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் 10 நாள் தியான பயிற்சியில் ஈடுபட இருப்பதால் அமலாக்கத்துறை விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு 2021-ல் புதிய மதுபான கொள்கையை அறிவித்தது. இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது. புதிய மதுபான கொள்கையை அமல்படுத்துவதில் பல நூறு கோடி ஊழல்கள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா, இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.

சிபிஐ நடத்திய விசாரணையில் டெல்லி அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு மதுபான கொள்கை ஊழலில் தொடர்பிருக்கிறது என தெரிவிக்கப்பட்டது. மேலும் இதில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாகவும் சிபிஐ குற்றம்சாட்டியது. இதனால் இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் இணைந்து கொண்டது.
அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராக வேண்டு என கடந்த மாதம், முதல் முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அப்போது சட்டசபை தேர்தல்கள் நடைபெற்றதை சுட்டிக்காட்டி பிரசாரம் செய்யப் போவதால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக முடியாது என தெரிவித்திருந்தார் கெஜ்ரிவால். அதேநேரத்தில் அமலாக்கத்துறை, அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தால் அடுத்த முதல்வர் யார் என்பது உள்ளிட்டவை தொடர்பாகவும் ஆம் ஆத்மி கட்சி ஆலோசனை நடத்தியிருந்தது.
இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆஜராக 2-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் இந்த முறை 10 நாள் தியானப் பயிற்சியில் ஈடுபட இருப்பதால் விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மாட்டார் என ஆம் ஆத்மி கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து நேற்று பிற்பகல் திடீரென அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் மாநிலம் புறப்பட்டுச் சென்றார். பஞ்சாப் மாநிலம் சென்ற கெஜ்ரிவாலுக்கு அங்கு ஆம் ஆத்மி கட்சியினர் வரவேற்பளித்தனர். இதனைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் 10 நாட்கள் வெளி உலகத் தொடர்பு இல்லாமல் தியானப் பயிற்சி முகாமில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்க உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
அமலாக்கத்துறை முன்பாக இன்று அரவிந்த் கெஜ்ரிவாலின் வழக்கறிஞர்கள் ஆஜராகி அவரால் நேரில் வர இயலாத காரணத்தை தெரிவிக்க இருக்கின்றனர். இதனையடுத்து அமலாக்கத்துறை அடுத்ததாக என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications