டெல்லியில் தற்போது எங்கும் கலவரம் இல்லை.. வதந்திகளை நம்ப வேண்டாம்.. போலீஸ் அறிவுறுத்தல்!
டெல்லியில் கலவரம் பரவுவதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளுக்கு டெல்லி போலீஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.
டெல்லி: டெல்லியில் கலவரம் பரவுவதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளுக்கு டெல்லி போலீஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.
டெல்லியில் சிஏஏ போராட்டத்தில் பெரிய அளவில் கலவரம் ஏற்பட்டது. டெல்லியில் கடந்த பிப்ரவரி 25 மற்றும் 26 தேதிகளில் ஜப்பார்பேட், மவ்ஜ்பூர், சாந்த்பாக், குர்ஜீ காஸ், பஜன்பூரா ஆகிய பகுதிகளில் கடுமையான கலவரம் நடந்தது.

டெல்லி கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி கலவரத்தில் 275 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த கலவரத்தில் காயம் அடைந்த பலர் டெல்லியில் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
டெல்லி கலவரம் நடந்து முடிந்து 3 நாட்கள் ஆகியும் அதன் பாதிப்பு இன்னும் தலைநகரில் போகவில்லை. தற்போது டெல்லியில் அமைதி நிலவி வருகிறது. அங்கு போலீசார் பல இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்தான் டெல்லியில் கலவரம் பரவுவதாக சமூக வலைத்தளங்களில் இன்று மாலை 6 மணிக்கு பிறகு செய்திகள் வெளியானது. முக்கியமாக டெல்லி திலக் நகர், கையலா - ரகுபீர் நகர், ஓஹ்லா, ஜசோலா ஆகிய பகுதிகளில் கலவரம் நடப்பதாக செய்திகள் வெளியானது.
அதேபோல் டெல்லியில் ஷாகீன் பாக் போராட்டம் நடக்கும் பகுதியிலும் கலவரம் நடப்பதாக செய்திகள் வெளியானது. இதையடுத்து டெல்லியில் திலக் நகர் மெட்ரோ போக்குவரத்து பாதுகாப்பு கருது நிறுத்தப்பட்டது. அதன் கேட் மொத்தமாக மூடப்பட்டது.
இந்த நிலையில் டெல்லியில் கலவரம் பரவுவதாக வெளியாகும் செய்திகளுக்கு டெல்லி போலீஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. அதன்படி டெல்லியில் எங்கும் கலவரம் நடக்கவில்லை. ஷாகீன் பாக் போராட்டம் எப்போதும் போல நடந்து வருகிறது. அங்கு கலவரம் நடக்கவில்லை.
கையலா - ரகுபீர் நகர் பகுதியில் போலீஸ் நடத்திய சூதாட்ட ரெய்டில் சிலர் கைது செய்யப்பட்டனர். இதை சிலர் கலவரம் என்று தவறாக செய்தி பரப்புகிறார்கள். கையலா - ரகுபீர் நகரிலோ டெல்லியில் வேறு எங்குமோ கலவரம் நடக்கவில்லை. பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications