டெல்லி தேர்தல்: காங்கிரஸ், ஆம் ஆத்மியிடம் இருந்து தலித் வாக்குகளை அறுவடை செய்யுமா பாஜக?
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் உயர் ஜாதியினர் வாக்குகளுக்கு இணையாக உள்ள தலித் வாக்குகள் மிக முக்கியமானதாக கவனிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் காங்கிரஸ், தற்போது ஆம் ஆத்மி வசம் உள்ள இந்த தலித் வாக்குகளை பாஜக இம்முறை அறுவடை செய்துவிடுமா? என்பது எதிர்பார்ப்பு.
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி டெல்லியில் தலித்துகள் 16.5% பேர் உள்ளனர். டெல்லியில் உயர்ஜாதியினர் வாக்குகளுக்கு அடுத்ததாக தலித் வாக்குகள் அதிகமாகும். ஆனால் தலித் வாக்குகளைப் பெறுவதில் தொடர்ந்து பாஜக தோல்வியைத்தான் பெற்று வருகிறது. தலித் வாக்குகளை முன்னர் காங்கிரஸும் பின்னர் ஆம் ஆத்மியும் அறுவடை செய்து வருகின்றன.
டெல்லியைப் பொறுத்தவரை உயர்ஜாதியினர் ஆதிக்கம் உள்ள யூனியன் பிரதேசமாகும். ஜாட்களைத் தவிர்த்து டெல்லியில் உயர்ஜாதியினர் 40% உள்ளனார்.
1993-ம் ஆண்டு டெல்லியில் பாஜக வெற்றி பெற்ற போதும் கூட தலித்துகள் அதிகமாக உள்ள தொகுதிகளான சுல்தான்பூர் மஜ்ரா, மங்கோல்புரி, திர்லோக்புரி, அம்பேத்கர் நகர் ஆகியவற்றில் அக்கட்சியால் வெல்ல முடியவில்லை. அத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற 14 இடங்களில் 6 தொகுதிகளில் தலித்துகள் 20%-க்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்டவை.
இந்தி பேசும் மாநிலங்களில் டெல்லியில் மட்டும்தான் தலித்துகளின் வாக்குகளை பாஜகவால் அறுவடை செய்ய முடியவில்லை. டெல்லியைப் பொறுத்தவரையில் பாஜகவுக்கு வலிமையான வாக்கு வங்கி இருக்கிறது. ஜனசங்கம் காலத்தில் இருந்தே டெல்லியில் பாஜக வலிமையாகவே இருந்து வருகிறது. நாடு விடுதலை அடைந்த பின்னர் பஞ்சாப் அகதிகள், வர்த்தகர்களிடையே பாஜக செல்வாக்கு செலுத்த தொடங்கியது. அயோத்தி ராமஜென்மபூமி விவகாரத்தில் ஜாட், குஜ்ஜார்களின் ஆதரவை பாஜக பெற்றது. இதனால் பாஜகவுக்கு நிலையான வாக்கு வங்கி அமைந்தது. இதனால் இயல்பாகவே தலித்துகளின் ஆதரவை பாஜக் பெற இயலாமல் போனது.
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் பல்வேறு தலித் அமைப்புகள்தான் தலித் வாக்கு வங்கியில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இதனைத்தான் கடந்த காலங்களில் காங்கிரஸும் தற்போது ஆம் ஆத்மியும் பயன்படுத்தி வெற்றி பெற்று வந்தன. இத்தனைக்கும் காங்கிரஸ் கட்சியின் ஷீலா தீட்சித்தும் அரவிந்த் கெஜ்ரிவாலும் உயர்ஜாதியினராக இருந்த போதும் தலித்துகளை கவரும் வகையிலான அவர்களது அரசியல், தலித் வாக்குகளை அறுவடை செய்ய உதவியாக இருந்தன. கடந்த இரண்டு சட்டசபை தேர்தல்களிலும் ஆம் ஆத்மி கட்சிதான் தலித் வாக்குகளை அதிகமாக பெற்றுள்ளன.

அதேநேரத்தில் லோக்சபா தேர்தலில் தலித்துகளின் வாக்குகளை பாஜக அறுவடை செய்தது. ஆனால் சட்டசபை தேர்தல்களில் தலித் வாக்குகளை பாஜகவால் பெற முடியவில்லை. டெல்லியில் தலித்துகளிடையேயான உள் ஜாதி பிரிவுகள் மிக முக்கியமான வாக்கு வங்கியாக இருக்கின்றன. தலித் மக்கள் தொகையில் 38% ஜாதவ்/ சாமர் தலித்துகள். வால்மீகி பிரிவினர் 21% உள்ளனர். காதிக், கோலி மற்றும் டோபி பிரிவினர் 6% முதல் 7% உள்ளனர். ஜாதவ்/ சாமர்/ வால்மீகி பிரிவினர்தான் தலித்துகளில் அதிகமாக எண்ணிக்கையில் உள்ளனர். கிழக்கு, வடகிழக்கு டெல்லியில் ஜாதவ் தலித்துகள் 50% உள்ளனர். இத்தொகுதிகளில் பாஜகவால் வாக்குகளை அறுவடை செய்ய முடியாமல் போனது.புது டெல்லி, தெற்கு டெல்லி, தென்மேற்கு டெல்லியில் வால்மீகி தலித்துகள் அதிகமான வாக்காளர்களாக உள்ளனர். இந்த இடங்களில் தலித்துகளை இந்துத்துவா கோட்பாட்டின் கீழ் பாஜகவால் ஒருங்கிணைக்க முடியாத அளவுக்கு அம்பேத்கரிய தாக்கம் உள்ளது.
10 ஆண்டுகள் தொடர்ச்சியான பாஜக ஆட்சி, 2 முறை டெல்லி மாநகராட்சியை தம் வசம் வைத்திருந்த ஆம் ஆத்மி மீது இந்த முறை தலித்துகள் சற்று அதிருப்தியில்தான் இருக்கின்றனர் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இந்த அதிருப்தியை அறுவடை செய்வதற்காக பாஜக படுதீவிரம் காட்டி வருகிறது. காங்கிரஸும் இழந்த தலித் வாக்கு வங்கியை பெறுவதற்காக போராடுகிறது. டெல்லியின் புதிய ஆட்சியை தீர்மானிக்கும் வகையில் தலித்துகளின் வாக்குகள் பெறும் எதிர்பார்ப்புக்குரியதாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications