நடுங்கும் குளிரில்.. விடாப்பிடியாக.. வீரத்துடன்.. 24வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்
டெல்லியில் 24வது நாளாக போராடி வருகிறார்கள் விவசாயிகள்
டெல்லி: இன்றும் குளிரில் நடுங்கியபடியே, விவசாயிகள் தங்கள் 24வது நாள் போராட்டத்தை டெல்லியில் முன்னெடுத்து வருகின்றனர்.
புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லி மற்றும் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் இன்று 24-வது நாளை எட்டியுள்ளது. அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு மாநிலங்களிலும் விவசாய சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சந்தை அமைப்பு
புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை, சந்தை அமைப்பு போன்றவற்றுக்கு ஆபத்து இருக்கிறது, அதனால் அந்த சட்டம் எங்களுக்கு வேண்டாம், திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் இந்த போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள்... மேலும்வேளாண் சட்டங்கள் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

உணவு
விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.. காங்கிரஸ் தலைவரும், குத்துச்சண்டை வீரருமான விஜேந்தர் சிங், திக்ரி எல்லையில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஜமீந்தரா மாணவர் அமைப்பு (ஜேஎஸ்ஓ) ஏற்பாடு செய்திருந்த உணவை விநியோகம் செய்தார்.

கறுப்பு சட்டங்கள்
பிறகு இதுபற்றி அவர் சொல்லும்போது, "எங்கள் நாட்டின் விவசாயிகளுக்கு சேவை செய்ய நாங்கள் இங்கு வந்துள்ளோம்... எங்களது போராட்டம் மத்திய அரசிற்கு எதிரானது கிடையாது.. அந்த 3 கறுப்பு சட்டங்களுக்கு தான் எதிரானது" என்றார்.

நாளிதழ்கள்
இதனிடையே, விவசாயிகளின் போராட்டம் மற்றும் அது தொடர்பான செய்திகள் தினம்தோறும் நாளிதழ்களில் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையிலும் முழுமையாக விவசாயிகள் போராட்டம் அது தொடர்பான செய்திகளை கொடுக்கும் வகையில், புதிய நாளிதழ் ஒன்றை 6 இளைஞர்கள் கொண்ட குழு தொடங்கியுள்ளனது. அந்த நியூஸ் பேப்பருக்கு "ட்ராலி டைம்ஸ்" என பெயர்.. அந்த பத்திரிக்கை வீக்லி அதாவது வாரந்திர நாளிதழாக வெளிவர போகிறதாம்.

"ட்ராலி டைம்ஸ்"
இதன் முதல் பதிப்பு நேற்று வெளியானது... முதல்நாளே 2 ஆயிரம் பத்திரிக்கைகள் வெளியானது... பஞ்சாபி, ஹிந்தி என ரெண்டு மொழிகளிலும் அச்சிடப்பட்டுள்ளது.. இந்த பத்திரிகையை விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கி படித்தனர்.. பத்திரிகைக்கு நல்ல வரவேற்பும் தந்தனர்.. இந்த நாளிதழில், விவசாயிகள் போராட்டம், 3 சட்டம், மத்திய அரசுடன் நடந்து வரும் பேச்சுவார்த்தை தொடர்பான செய்திகளே இடம்பெற்று வருகிறதாம். இந்த 6 இளைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications