ஸ்தம்பிக்கும் தலைநகர்.. 20வது நாளை எட்டிய விவசாயிகள் போராட்டம்.. அய்யாக்கண்ணுவும் டெல்லி செல்கிறார்!
விவசாயிகளின் போராட்டம் இன்று 20வது நாளாக நடந்து வருகிறது
டெல்லி: விவசாயிகளின் போராட்டம் இன்று 20-வது நாளை எட்டி உள்ள நிலையில், தலைநகரமே ஸ்தம்பித்து வருகிறது.. இதனிடையே தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி. பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டனர்.. இன்று அவர்கள் 20-வது நாளாகவும் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
ஒருபக்கம் சிங்கு, திக்ரி, காஜிப்பூர் என டெல்லியின் எல்லை பகுதிகளில் விவசாயிகள் திரண்டு வருகின்றனர்.. மற்றொரு பக்கம், டெல்லியை அடையும் சாலைகளையும் ஆக்கிரமிக்க திட்டமிட்டு வருகின்றனர்.
டிராக்டர்
இதற்கு நடுவில், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர்களில் டெல்லியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். இதனால் டெல்லியே திணறி வருகிறது. எனினும், டெல்லிக்குள் நுழையும் நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே விவசாயிகள் நுழைவதை தடுக்க எல்லை பல நெடுஞ்சாலை பகுதிகள் மூடப்பட்ட நிலையில், சிங்கு, அச்சண்டி, மணியாரி, சபோலி மற்றும் மங்கேஷ் எல்லைகள் மூடப்பட்டுள்ளன.
அமைப்புகள்
மத்திய அரசு இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு வர முயன்று வருகிறது.. ஆனால், இவர்களுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியை தழுவியபடியே உள்ளது.. எனினும் வேறு வேறு வடிங்களில் தங்களின் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். நேற்று விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், ஒருநாள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.. இவர்களுக்கு டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவாலும் ஆதரவு தந்து, அவரும் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார்.
அய்யாக்கண்ணு
தலைநகரை தவிர, போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லி சென்று போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநில செயற்குழு கூட்டம்
கடந்த முறை டெல்லி விவசாயிகள் போராட்டத்தை திரும்பி பார்க்க வைத்தவர் அய்யாக்கண்ணு.. இந்த முறை அய்யாக்கண்ணு ஏன் டெல்லி செல்லவில்லை என்ற கேள்விகளும் எழுந்தபடியே இருந்த நிலையில்தான், தற்போது அவரது டெல்லி பயணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அய்யாக்கண்ணு நேற்று பேசும்போது, "திருச்சியில் எங்கள் விவசாயிகள் அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் வருகிற 17-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் டெல்லி செல்லும் தேதி முடிவு செய்யப்படும்" என்று சொல்லி உள்ளார்.
மனு தாக்கல்
இதனிடையே, டெல்லியின் எல்லைகளில் போராடும் விவசாயிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், இதனால் போக்குவரத்து மற்றும் பொருளாதார பிரச்சனைகள் ஏற்படுவதாகவும், மக்கள் அவரசத்திற்கு செல்ல முடியாமல் பாதிப்படைவதாகவும், சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.