பெண்கள் வங்கிக் கணக்கில் மாதம்தோறும் ரூ.2500.. மகிளா சம்ரிதி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?
டெல்லி: தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை இருப்பது போலவே டெல்லியில் பெண்களுக்கு மாதம் ரூ.2500 வழங்கும் மகிளா சம்ரிதி திட்டத்தை டெல்லி பாஜக அரசு அறிவித்துள்ளது. நாளை மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக இத்திட்டத்தில் சுமார் 20 லட்சம் பெண்கள் பலனடைவார்கள் எனத் தெரிகிறது.
கடந்த 2021 தேர்தல் சமயத்தில் திமுக மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் உரிமை தொகை திட்டத்தை அறிவித்தது. இதற்குப் பெண்களிடையே மிகச் சிறப்பான வரவேற்பு இருந்தது. தேர்தலிலும் இது நன்கு எதிரொலித்தது. அதைத் தொடர்ந்து பல்வேறு கட்சிகளும் பல மாநிலங்களில் இதேபோன்ற உதவித் தொகை திட்டத்தை அறிவித்து வருகிறது.

உரிமை தொகை திட்டம்
அதன்படி டெல்லியிலும் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு பாஜக பெண்களுக்காக மகிளா சம்ரிதி என்ற திட்டத்தை அறிவித்தது. பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள பெண்களுக்கு மாதாந்திர நிதி உதவி வழங்குவதே இதன் நோக்கமாகும். டெல்லி தேர்தலில் வென்று ஆட்சியை அமைத்துள்ள பாஜக முதலமைச்சர் ரேகா குப்தா, இது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நாளை மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மகிளா சம்ரிதி திட்டத்தை டெல்லி அரசு செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக ₹2,500 டெபாசிட் செய்யப்படும். இத்திட்டத்திற்குத் தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக டெல்லியில் சுமார் 15 முதல் 20 லட்சம் பெண்கள் இதில் பலனடைவார்கள் எனத் தெரிகிறது.
நிபந்தனைகள் என்ன?
18 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அரசு வேலையில் இருக்கும் பெண்கள் இதில் தகுதி பெற மாட்டார்கள். வேறு எந்தவொரு அரசு உதவித்தொகை திட்டத்தில் இருந்தும் நிதியுதவி பெறும் நபராக இருக்கக் கூடாது. குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். மேலும் இதில் விண்ணப்பிக்கும் பெண்கள் வரி செலுத்துவோராக இருக்கக்கூடாது.
ஆவணங்கள் என்ன?
இத்திட்டத்தில் பயன் பெற என்ன ஆவணங்கள் தேவை என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பையும் டெல்லி அரசு வெளியிடவில்லை. இருப்பினும், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, முகவரிச் சான்று. பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் ஆகியவை தேவைப்படும் என்றே தெரிகிறது.
தனி இணையதளம்
மேலும், இத்திட்டத்திற்காக டெல்லி அரசு தனியாக ஒரு இணையதளத்தை உருவாக்கி வருகிறதாம். அதில் சென்றே பெண்கள் விண்ணப்பிக்க வேண்டும். அந்த தளத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் டேட்டாவும் இடம்பெற்று இருக்கும். இதனால் ஒருவர் வேறு திட்டங்களில் உதவித்தொகை பெறுகிறாரா.. அவர் உதவித்தொகை திட்டத்திற்குத் தகுதி பெறுவாரா என்பதை ஈஸியாக செக் செய்ய முடியும்.
இந்த இணையதளத்திற்குச் சென்று ஆதார் உள்ளிட்ட தகவல்களைக் கொடுத்து, அதை செல்போன் உடன் இணைத்தாலே போதும். பிறகு நீங்கள் தகுதி வாய்ந்த நபராக இருந்தால் மாதாமாதம் ரூ.2500 உங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.
இதன் மூலம் விண்ணப்பித்து அது பிராசஸ் ஆகி உதவித்தொகை கிடைக்குமா இல்லையா எனக் குழம்பிக்கொண்டு இருக்கத் தேவையில்லை. அனைத்து டேட்டாவும் ஒருங்கிணைந்து இருப்பதால் கொஞ்ச நேரத்திலேயே உதவித்தொகை பெறச் சம்பந்தப்பட்ட பெண் தகுதி பெறுகிறாரா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications