காற்று மாசு எதிரொலி.. டெல்லியில் இன்று முதல் சி.என்.ஜி. பேருந்துகள்
டெல்லி: டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், இன்று முதல் 1,000 தனியார் சிஎன்ஜி பேருந்துகளை வாடகைக்கு எடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநில அரசு முடிவு செய்துள்ளது.
டெல்லியில் வாகன புகை காரணமாகவும், பட்டாசுகள் வெடித்ததாலும், மேலும் அண்டை மாநிலங்களில் எரிக்கப்பட்ட விவசாய கழிகளாலும் புகை நச்சு மண்டலமாக மாறி பொதுமக்களை ஆட்டிப் படைத்து வருகிறது.

எங்கு சென்றாலும் புகை மண்டலம்
தலைநகர் டெல்லியில் எங்கே சென்றாலும் புகை மூட்டமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். இந்த பிரச்சனை உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல, டெல்லியில் ஏன் முழு முடக்கம் கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். இதனால் வேறு வழியின்றி பள்ளி கல்லூரிகளை காலவரையின்றி மூட உத்தரவு பிறப்பித்தது டெல்லி மாநில அரசு.

சிஎன்ஜி பேருந்துகள்
இந்நிலையில் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் விதமாக டெல்லி மாநில அரசு 1,000 தனியார் சிஎன்ஜி பேருந்துகளை வாடகைக்கு எடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கைகள் நாளை தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்து வேலை
நவம்பர் 21 வரை அரசு மற்றும் தனியார் அலுவலக பணியாளர்கள் 50 சதவீதம் பேர் வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டும் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களைத் தவிர பிற வாகனங்கள், லாரிகள் டெல்லி மாநிலத்திற்குள் நுழையக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பழைய வாகனங்களுக்குத் தடை
15 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் வாகனங்களை இயக்கவும் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300 கிமீ தொலைவுக்குள்ள அனல்மின்நிலையங்களில் ஐந்தை தவிர மற்றவைகளை நவம்பர் 30 வரை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜெய்ஜார், மகாத்மா காந்தி, உள்ளிட்ட 5 அனல்மின்நிலையங்கள் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் டீசல் பேருந்துகளுக்கு பதிலாக சி.என்.ஜி. மூலம் அதிகப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அபராதம்
மேலும் சாலைகளில் கட்டுமானம் மற்றும் இடிபாடுகள் சம்பந்தப்பட்ட பொருட்களை கொட்டினால் அபராதம் விதிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்தவது தொடர்பான கூட்டத்தில் உத்தரபிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் மாநில அதிகாரிகளும் கலந்து கொண்டனர். புதிய விதிகள் வகுக்கப்பட்டது தொடர்பாக நவம்பர் 22ம் தேதி அறிக்கை அளிக்கவும் இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications