அத்தியாவசிய பொருட்கள் வினியோகத்தின்போது ரோஹிங்யா அகதிகளை புறக்கணிக்கவில்லை.. டெல்லி அரசு உறுதி
டெல்லி: லாக்டவுனுக்கு மத்தியிலும் ரோஹிங்கியா அகதிகளுக்கு போதுமான ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதாக, டெல்லி மாநில அரசு, உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
வடகிழக்கு டெல்லியில் உள்ள கஜூரி காஸ் மற்றும் தென் டெல்லியில் உள்ள ஷ்ரம் விஹார் மற்றும் மதான்பூர் காதர் ஆகிய இடங்களில் உள்ள ரோஹிங்யா குடியேற்றங்களில் வசிக்கும் ரோஹிங்யா மக்களுக்கு, உடனடி நிவாரணம் வழங்க கோரி, டெல்லி ஹைகோர்ட்டில் ஃபசல் அப்தாலி என்பவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு பதிலளித்தபோது, டெல்லி அரசு இவ்வாறு கூறியுள்ளது. நீதிபதிகள் மன்மோகன் மற்றும் சஞ்சீவ் நருலா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் டெல்லி அரசு இந்த பதிலை சமர்ப்பித்தது.
டெல்லி அரசின் கூடுதல் அரசு வழக்கறிஞர், சஞ்சோய் கோஸ் மற்றும் வழக்கறிஞர் ஊர்வி மோகன் ஆகியோர் இணைந்து நீதிமன்றத்தில் இன்று இந்த அறிக்கையை சமர்ப்பித்தனர்.
டெல்லி அரசு அறிவித்த பல்வேறு திட்டங்களின் கீழ் இந்த மூன்று முகாம்களில் உள்ள ரோஹிங்கியாக்களுக்கு மட்டும் நிவாரண உதவி மறுக்கப்படுவதாக மனுதாரர் ஃபசல் அப்தாலி கூறியிருந்த நிலையில், இந்த குடும்பங்கள் எதிர்கொள்ளும் புறக்கணிப்பு குறித்த எந்தவொரு குறிப்பிட்ட சாட்சியங்கள் அல்லது ஆவணங்களையும் மனுதாரர் வழங்கவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மருத்துவ கவனிப்பு, குடிதண்ணீர் அல்லது ரேஷன் மறுக்கப்பட்ட அகதியின் பெயர் மற்றும் முகவரி குறித்து மனுதாரர் நோடல் அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.












Click it and Unblock the Notifications