தம்பதிக்கு டைவர்ஸ்.. சம்பாதிக்க மட்டும் மனைவி வேணுமா?.. டெல்லி ஹைகோர்ட் சரமாரி கேள்வி
டெல்லி: மனைவியை புகுந்த வீட்டிற்கு அழைத்து செல்லாமல் பணம் சம்பாதிக்கும் ஒரு பொருளாக மட்டுமே பார்த்ததை அடுத்து அந்த தம்பதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியை சேர்ந்த தம்பதிக்கு கடந்த 2000 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது ஆணுக்கு 19 வயதும் பெண்ணுக்கு 13 வயதும் இருந்தது. அதாவது பெண் மைனராக இருந்தார்.
2005 ஆம் ஆண்டு அந்த பெண் 18 வயதை அடைந்த பிறகும் கணவரோ அந்த பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து சென்று குடும்பம் நடத்தவில்லை. பெண் வீட்டார் கேட்டும் அவர் அழைத்து செல்ல ஆர்வம் காட்டவில்லை. 2005 ஆம் ஆண்டு முதல் மனைவியை தன் வீட்டுக்கு அழைத்து செல்ல விரும்பாத கணவர் திடீரென 2014 ஆம் ஆண்டு மனைவி மீது ஆர்வம் இருப்பது போல் இருந்துள்ளார்.

சொந்த காலில்
இதற்கு காரணம் தாய் வீட்டில் இருந்த அந்த பெண் சொந்த முயற்சியில் படித்து முடித்துவிட்டு டெல்லி போலீஸில் 2014 ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்தார். இதையடுத்து அந்த பெண்ணை தனது வீட்டுக்கு வருமாறு கணவர் அழைத்துள்ளார். இதையடுத்து பெண்ணும் கணவர் வீட்டிற்கு சென்று வசித்தார்.

வேலையில்லை
நவம்பர் 2014 ஆம் ஆண்டு முதல் அவருடன் வசித்ததில் அவருக்கு வேலையில்லை என்றும் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் அந்த பெண்ணுக்கு தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணிடம் அவ்வப்போது பணம் கேட்டு வந்துள்ளார். இவர் குடிப்பதற்காக பணம் கேட்டதால் ஒரு கட்டத்தில் அந்த பெண் தர மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த கணவர், அந்த பெண்ணை கடுமையாக துன்புறுத்தியுள்ளார்.

தள்ளுபடி
இந்த அடிதடி தொடர்ந்ததால் பொறுத்துக் கொள்ள முடியாத அந்த பெண் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். ஆனால் அந்த பெண்ணின் மனுவை குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அமர்வு
இந்த வழக்கானது நீதிபதி விபின் சங்கி, ஜாஸ்மீத் சிங் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 2005 ஆம் ஆண்டு அந்த பெண்ணிற்கு 18 வயது பூர்த்தியான போதும் 2014 ஆம் ஆண்டு வரை உங்கள் வீட்டிற்கு வாழ்வதற்கு ஏன் அழைத்து செல்லவில்லை என நீதிபதிகள் அந்த கணவரிடம் கேட்டனர். அதற்கு அவர் முறையான நியாயமான எந்த பதிலையும் அளிக்கவில்லை.

குடும்பம்
அப்போது நீதிபதிகள் கூறுகையில் திருமணமான எந்த ஒரு பெண்ணும் குடும்பத்தை தொடங்கவே நினைப்பார். எனினும் தற்போதைய வழக்கில் குடும்பத்தை விஸ்தரிக்க கணவர் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் அவர் மனைவியின் வருமானத்தின் மீது மட்டும் நன்றாக ஆர்வம் காட்டுவது தெரிகிறது. அதனால்தான் 2014 ஆம் ஆண்டு வரை அந்த பெண்ணிற்கு வேலை கிடைக்கும் வரை தாய் வீட்டிலேயே விட்டுவிட்டு வந்த கணவர் வேலை கிடைத்ததும் அந்த வருமானத்திற்காக புகுந்த வீட்டிற்கு அழைத்துள்ளார் என்றனர்.

காவல் துறை வேலை
அப்போது அந்த கணவர் கூறுகையில் அந்த பெண்ணை நான் தான் படிக்க வைத்தேன். டெல்லி காவல் துறையில் நான்தான் வேலை வாங்கிக் கொடுத்தேன். ஆனால் அந்த பெண்ணிற்குதான் என்னுடன் வசிக்க விருப்பமில்லை. அதனால்தான் நான் விட்டுவிட்டேன். பின்னர் 2014 ஆம் ஆண்டு அழைத்தேன், அவர் என்னுடன் வந்து வசித்தார் என்றார். இதையடுத்து மனைவியுடன் சேர்ந்து குடும்பம் நடத்தி குழந்தை, குட்டி என வாழ விரும்பாமல் தான் குடிப்பதற்கு பணம் கொடுக்கும் இயந்திரமாக மனைவியை பார்த்த காரணத்தினால் இவர்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் விவாகரத்து கொடுத்து தீர்ப்பளித்தது.












Click it and Unblock the Notifications