எதற்காக ஸ்டார் ஹோட்டலில் 100 அறைகள்.. நாங்கள் கேட்டோமா.. டெல்லி அரசை வறுத்தெடுத்த ஹைகோர்ட்
டெல்லி: நீதிபதிகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்க நட்சத்திர ஹோட்டல்களில் 100 அறைகளை ஒதுக்குமாறு நாங்கள் கேட்டோமா, யாரை கேட்டு இப்படி அறைகளை ஒதுக்கியுள்ளீர்கள். நாங்கள் என்ன சொன்னோமோ அதை செய்யுங்கள் என டெல்லி அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் தினந்தோறும் 20 ஆயிரம் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருவதாலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையாலும் தலைநகரே சுடுகாடாகி வருகிறது. ஆக்ஸிஜன் சிலிண்டருக்காக அண்டை மாநிலங்களை எதிர்பார்க்கும் நிலை உள்ளது.
இந்த நிலையில் நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர் கொரோனா சிகிச்சை பெறுவதற்காக டெல்லியில் உள்ள 5 நட்சத்திர அசோகா ஹோட்டலில் 100 அறைகளை திடீரென டெல்லி அரசு புக் செய்தது. இந்த 100 அறைகளும் கொரோனா சிகிச்சை படுக்கைகளாக மருத்துவ வசதிகளுடன் மாற்றப்பட்டுள்ளன என டெல்லி அரசு அறிவித்தது.

பிரத்யேகம்
நீதிபதிகளுக்காக பிரத்யேகமாக இது புக் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் கிளப்பியது. தற்போது டெல்லி உயர்நீதிமன்றமே இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நீதிபதிகள் பிவின் சங்கி மற்றும் ரேகா பள்ளி ஆகியோர் தாமாக முன் வந்து இந்த விவகாரத்தை கையில் எடுத்தனர்.

வழக்கறிஞர்கள்
நீதிபதிகள் டெல்லி அரசின் வழக்கறிஞரிடம், நட்சத்திர ஹோட்டல்களில் அறைகளை ஒதுக்குமாறு நாங்கள் ஒரு போதும் கோரிக்கை வைக்கவில்லை. நாங்கள் பிறப்பித்த உத்தரவை தவறாக அமல்படுத்துகிறீர்கள். கடந்த 25 ஆம் தேதி நாங்கள் பிறப்பித்த உத்தரவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது.

உத்தரவு
துணை நீதிமன்ற நீதிபதிகள் நீதிமன்றங்களுக்கு செல்லத்தான் வேண்டும். இதனால் அவர்களும் அவர்களுடைய குடும்பத்தாரும் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் இரு நீதிபதிகளை நாங்கள் இழந்துவிட்டோம். எனவே நீதிபதிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை மருத்துவமனைகளில் உடனே அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றுதான் நாங்கள் கேட்டுக் கொண்டோம். இதையே உத்தரவாக பிறப்பித்தோம்.

ஆக்ஸிஜன்
ஆனால் நட்சத்திர ஹோட்டல்களில் அறை ஒதுக்கி சிகிச்சை அளிக்க வேண்டும் என நாங்கள் கேட்கவில்லையே. டெல்லியில் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் கொடுப்பதற்கே திண்டாடுகிறீர்கள். இதில் நீங்கள் எங்களுக்கு ஸ்டார் ஹோட்டலில் 100 படுக்கை வசதிகள் செய்துள்ளதாக சொல்கிறீர்கள். எதை பற்றியும் கவலைப்படாமல் நீங்களாக ஒரு உத்தரவை பிறப்பிக்கிறீர்கள்.

மருத்துவர்கள்
ஆட்கள், மருத்துவர்கள், ஆக்ஸிஜன், முக்கிய கருவிகள், செயற்கை சுவாச கருவிகள் ஆகியவை இல்லை. ஆனால் எங்களுக்காக ஒரு உத்தரவை மட்டும் போடுகிறீர்கள். பேப்பரில் ஒரு உத்தரவை பிறப்பித்து உங்கள் வேலையை முடித்துவிட்டீர்கள். மக்களுக்கு சிகிச்சை கிடைக்கவில்லை, இதில் எங்களுக்கு நட்சத்திர ஹோட்டல்களில் அறை ஒதுக்குமாறு நாங்கள் கேட்டோமா?

விமர்சனம்
100 அறைகள் ஒதுக்கீடு குறித்த அரசு உத்தரவை திரும்ப பெற்று கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நாங்களாகவே அதை ரத்து செய்ய நேரிடும். நீங்கள் பிறப்பித்த உத்தரவு குறித்து விளக்கமளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதற்கிடையே, நீதிபதிகள், அவர்களின் குடும்பத்தினர் கொரோனா சிகிச்சை பெற அசோகா ஹோட்டலில் டெல்லி அரசு 100 அறைகளை புக் செய்தது தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளார்.

கடவுளா
சாமானிய நபர்கள் கொரோனாவால் இறக்கிறார்கள். அவர்களுக்கு நட்சத்திர ஹோட்டலில் சிகிச்சை அளிக்க நீதிபதிகள் என்ன கடவுளா? வரி கட்டுவோர் சாலைகளில் இறக்க வேண்டுமா என்று பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் டெல்லி ஹைகோர்ட்டே, டெல்லி அரசை விளாசித் தள்ளியுள்ளது.












Click it and Unblock the Notifications