கடும் காய்ச்சல்.. ஆக்ஸிஜன் அளவு திடீரென குறைந்தது.. டெல்லி சுகாதார அமைச்சர் மருத்துவமனையில் அட்மிட்
டெல்லி: டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சல் பிரச்சனையால் அங்குள்ள ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. அதிலும் கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நல்லவேளையாக, அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது.

இந்தநிலையில், அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். மேலும் கடும் சுவாசப் பிரச்சினை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுபற்றி அவரது டுவிட்டர் கணக்கில் அட்மின் ஒரு ட்விட் வெளியிட்டுள்ளார். அதில், உயர்ந்த காய்ச்சல் மற்றும் ரத்தத்தில், ஆக்சிஜன் அளவு திடீரென குறைந்ததன் காரணமாக நேற்று இரவு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சத்யேந்திர ஜெயின் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். பிறகு அப்டேட் செய்கிறேன் என்று தெரிவித்துள்ளது.
இந்த அறிகுறிகள் அனைத்தும் கொரோனா நோய் பாதிப்புக்கு தொடர்புடையவை என்பதால், இன்று அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே முழு ஊரடங்கை டெல்லியில் அமல்படுத்தப் போவதில்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறிவரும் நிலையில் அவரது அமைச்சரவை சகா அதிலும், சுகாதாரத் துறை அமைச்சருக்கு இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளதால் சென்னையைப் போல டெல்லியிலும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications