இரட்டை இலை வழக்கில் ட்விஸ்ட்.. “இன்னும் எவ்வளவு டைம்?” தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி ஐகோர்ட் கேள்வி!
டெல்லி: அதிமுகவின் இரட்டை இலை சின்னம் விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. டெல்லி உயர்நீதிமன்றம், அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் அளிக்கப்பட்ட மனு மீது எவ்வளவு காலத்தில் முடிவெடுக்க முடியும் என தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி, தேர்தல் ஆணையத்திற்கு எதிராகத் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை வரும் பிப்ரவரி 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பான புகார்கள் மீது தேர்தல் ஆணையம் நீண்ட காலமாக முடிவெடுக்காமல் இருப்பதை எதிர்த்து அதிமுக முன்னாள் நிர்வாகியான பெங்களூர் புகழேந்தி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவில் தேர்தல் ஆணையத்திற்கு கால அவகாசம் நிர்ணயிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. நீதிமன்றம் இதனை ஏற்று, தேர்தல் ஆணையத்திற்கு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. இதனால் இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் விரைவில் தெளிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவில் 2021-க்குப் பிறகு ஏற்பட்ட உட்கட்சி பிளவு காரணமாக இரட்டை இலை சின்னம் தொடர்பான சர்ச்சை நீண்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி இரட்டை இலை சின்னத்தை தக்கவைத்துள்ளது. ஆனால், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் போன்ற தரப்பினர் சின்னம் தொடர்பாக பல்வேறு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இதனால் தேர்தல் ஆணையம் பல கட்ட விசாரணைகளை நடத்தி வருகிறது. 2024 லோக்சபா தேர்தலின்போது அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது. ஆனால், உட்கட்சி புகார்கள் காரணமாக சின்னம் மாற்றப்படலாம் என்ற அச்சம் நீடித்து வருகிறது.
பெங்களூர் புகழேந்தி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தேர்தல் ஆணையம் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இந்த வழக்கு விசாரணை பலமுறை ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இப்போது பிப்ரவரி 23-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இரட்டை சின்னம் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம், டெல்லி உயர்நீதிமன்றத்தி முடிவு அதிமுகவுக்கு மிக முக்கியமானது. எனவே அதிமுக தொண்டர்கள் இந்த வழக்கின் மீதான முடிவை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications