"மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கணும்.." டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு.. நாளை விசாரணை
டெல்லி: பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது.
நமது நாட்டில் இந்த முறை மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் 39 தொகுதிகள் உட்பட பல மாநிலங்களில் மொத்தம் 102 தொகுதிகளுக்குக் கடந்த வாரம் ஒரே கட்டமாக நேற்று தேர்தல் நடைபெற்றது. இன்னும் ஆறு கட்ட தேர்தல் பாக்கி இருக்கிறது.

நாளைய தினம் கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான் உட்பட 13 மாநிலங்களில் மொத்தம் 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
லோக்சபா தேர்தல்: இந்த முறை லோக்சபா தேர்தலில் தேசியளவில் பார்க்கும் போது இதில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது. இதனால் நாடு முழுக்க பிரச்சாரங்கள் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. அரசியல் தலைவர்கள் தொடர்ச்சியாகத் தீவிர பிரச்சாரங்களில் பங்கேற்று வருகிறார்கள். அதேநேரம் வெறுப்பு பேச்சு குறித்த புகார்களும் கணிசமாக அதிகரித்துள்ளன.
வழக்கு: இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி அடுத்த 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க கோரிய வழக்கு நாளை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது.. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கு தான் நாளை விசாரணைக்கு வருகிறது.
என்ன காரணம்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதைக் குறிப்பிட்டே வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, கடவுள் பெயர்களைக் குறிப்பிட்டும் , வழிபாட்டுத் தலங்களின் பெயர்களைக் குறிப்பிட்டும் வாக்கு சேகரித்தார் என்பதே புகாராகும். இது தேர்தல் நடத்தை விதிமீறல் என்பதால் அடுத்த 6 ஆண்டுகளுக்குப் பிரதமர் மோடி எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தான் டெல்லி ஐகோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சச்சின் தத்தா இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறார். லோக்சபா தேர்தல் நடந்து வரும் நிலையில், இந்த வழக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications