ஜேஎன்யூவை தொடர்ந்து டெல்லி ஜாமியா பல்கலை.யில் இன்று மோடி குறித்த ஆவணப்படம்- பதற்றம்!
பிரதமர் மோடி தொடர்பான சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை திரையிடுவது என்பது டெல்லி ஜாமியா பல்கலைக் கழக மாணவர்களின் திட்டம்.
டெல்லி: ஜே.என்.யூ. பல்கலைக் கழகத்தைத் தொடர்ந்து டெல்லி ஜாமியா பல்கலைக் கழகத்தில் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம் இன்று மாலை வெளியிடப்பட உள்ளது. இதனையடுத்து டெல்லி ஜாமியா பல்கலைக் கழகப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
2002-ம் ஆண்டு குஜராத் மதவன்முறைகளை மையமாக வைத்து India: The Modi Question என்ற தலைப்பில் பிபிசி ஊடகம் 2 தொகுதி ஆவணப் படங்களை உருவாக்கி உள்ளது. இந்த ஆவணப் படங்கள், பிரதமர் மோடிக்கு எதிராக இருக்கிறது என்பது சர்ச்சை. இதனால் பிபிசியின் ஆவணப் படங்களை மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடைக்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மேலும் கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மோடி ஆவணப் படத்தை பல இடங்களில் காங்கிரஸ், இடதுசாரிகள் திரையிட்டு வருகின்றனர். இதனால் பல மாநிலங்களில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தெலுங்கானாவின் ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் கடந்த வாரம் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. ஆனால் பல்கலைக் கழக நிர்வாகம் இதற்கு அனுமதி தர மறுத்தது. இதனை மீறி தெலுங்கானா பல்கலைக் கழகத்தில் ஆவணப்படம் ஒளிபரப்பானது.
இதேபோல் டெல்லி ஜே.என்.யூ.விலும் மோடி குறித்த இந்த ஆவணப்படம் பெரும் சர்ச்சையானது. இது தொடர்பாக இடதுசாரி, வலதுசாரி மாணவர் குழுக்களிடையே கடும் மோதல்கள் வெடித்தன. ஜே.என்.யூ. பல்கலைக் கழக வளாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆனாலும் தடையை மீறி ஆவணப்படங்களை மாணவர்கள் செல்போன் மூலம் ஒளிபரப்பினர்.
டெல்லி ஜேஎன்யூவைத் தொடர்ந்து ஜாமியா பல்கலைக் கழகத்தில் இன்று மாலை 6 மணிக்கு மோடி ஆவணப்படம் திரையிடப்படுகிறது. இதற்கு பல்கலைக் கழக நிர்வாகம் அனுமதி தரவில்லை. இதனால் டெல்லி ஜாமியா பல்கலைக் கழக பகுதியிலும் பெரும் பதற்றம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications