கட்டுக்கட்டாக எரிந்து கிடந்த பணம்! உச்சநீதிமன்றம் வெளியிட்ட ஷாக் வீடியோ.. ஹைகோர்ட் நீதிபதி மறுப்பு
டெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியான யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பாக உள்விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் நீதிபதி வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதாக உச்சநீதிமன்றம் வீடியோ வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் தனது வீட்டில் பணம் கைப்பற்றப்படவில்லை. இந்த வீடியோ முற்றிலும் அபத்தானமானது என்று நீதிபதி யஷ்வந்த் வர்மா மறுப்பு தெரிவித்துள்ளார்.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருபவர் யஷ்வந்த் வர்மா. கடந்த 4 ஆண்டுகளாக யஷ்வந்த் வர்மா டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தான் கடந்த 14ம் தேதி யஷ்வந்த் வர்மாவின் டெல்லி வீட்டில் திடெீரன்று தீ விபத்து ஏற்பட்டது.

அப்போது நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் இல்லை. அவரது மகள் மற்றும் வீட்டு பணியாளர்கள் மட்டுமே இருந்தனர். உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
அப்போது அவரது வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததும், தீயில் பணம் எரிந்ததும் தெரியவந்தது. இது விவாதத்தை கிளப்பியது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையில் கொலிஜியம் ஆலோசனை மேற்கொண்டது. இதையடுத்து யஷ்வந்த் வர்மாவை டெல்லியில் இருந்து மாற்ற முடிவு செய்யப்பட்டது.
அதன்படி டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் யஷ்வந்த் வர்மா மீண்டும் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டார். இவர் கடந்த 2021ம் ஆண்டு வரை அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தான் பணியாற்றினார். அதன்பிறகு தான் அங்கிருந்து டெல்லிக்கு மாற்றம் செய்யப்பட்டார். இப்போது மீண்டும் யஷ்வந்த் வர்மா அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு திரும்பி உள்ளார்.
மேலும் இதுதொடர்பாக விசாரிக்க உத்தரவிடப்பட்டது. டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டிகே உபாத்யாய், நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் விசாரணையை நடத்தினார். உச்சநீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை என்பது 25 பக்கங்களை கொண்டதாக உள்ளது. அதன்பிறகு விரிவான விசாரணைக்கு 3 நீதிபதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் விரிவான விசாரணை நடத்த உள்ளனர்.
இதற்கிடையே தான் உச்சநீதிமன்றம் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில் எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக பணம் கிடந்தது. இந்த வீடியோ என்பது டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ மற்றும் போட்டோ வெளியாகி தற்போது அனைவரையும் அதிர வைத்துள்ளது. இப்படியான சூழலில் தான் இந்த வீடியோ மற்றும் வீட்டில் பணம் எரிந்தது தொடர்பான விஷயத்தை நீதிபதி யஷ்வந்த் வர்மா முற்றிலுமாக மறுத்துள்ளார்.
இதற்கிடையே தான் தன் மீதான குற்றச்சாட்டை நீதிபதி யஷ்வந்த் வர்மா, ‛‛இது முற்றிலும் அபத்தமானது. நம்ப முடியாதது. வீடியோவில் இருக்கும் பணத்தை நான் பதுக்கவில்லை. தீ அணைக்கப்பட்ட பிறகு எரிந்த ரூபாய் நோட்டுகள் எதையும் தீயணைப்பு வீரர்கள் காட்டவில்லை என்று எனது மகள் கூறினார். எனது வீட்டில் இருந்து எந்த பணமும் கைப்பற்றப்படவில்லை. தீயில் சேதமடைந்த பொருட்கள் மட்டுமே அகற்றப்பட்டன. தீயில் எரிந்த பணம் தொடர்பான எதையும் வீரர்கள் கூறவில்லை. எனது மகள், ஊழியர்கள் இதனை தான் தெரிவித்து வருகின்றனர். மேலும் பணம் எரிந்து கிடப்பதாக கூறப்படும் அறை என்பது அனைவரும் பயன்படுத்த கூடாது. வீட்டு பணியாளர்கள், தோட்ட பணியாளர்கள், பொது ஊழியர்கள் என்று அனைவரும் பயன்படுத்த கூடியது. அப்படி இருக்கும்போது எப்படி அங்கு பணத்தை வைத்திருக்க முடியும். இது என்னை சிக்க வைக்கும் செயலாக இருக்கும்'' என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி உபாத்யாயா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அறிக்கையில் அவர், ‛‛நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் இல்லத்தில் நியமிக்கப்பட்டிருந்த போலீஸ்காரரின் கொடுத்த தகவல்படி பார்த்தால் மார்ச் 15ம் தேதி அன்று காலை தீவிபத்து ஏற்பட்ட அறையில் இருந்து எரிந்த பொருட்கள் அகற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை ஆணையம் மார்ச் 16ம் தேதி விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நான் நடத்திய விசாரணையில் நீதிபதியின் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படும் அறைக்கு அங்கு வசிப்பவர்களை தவிர வேறு யாரும் செல்ல வாய்ப்பில்லை. வேலையாட்கள், தோட்டக்காரர்கள் உள்பட பிற பணியாளர்கள் தவிர வேறு யாரும் அறைக்குள் செல்ல வாய்ப்பில்லை. முதற்கட்ட விசாரணையில் இதுபற்றி ஆழமான விசாரணை நடத்த வேண்டும்'' என்று கூறியுள்ளார். அதன்படி 3 நீதிபதிகள் கொண்டு அடுத்தக்கட்டமாக விரிவான விசாரணைக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உத்தரவிட்டுள்ளார் என்பது இங்கே குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications