மதுபான கொள்கை வழக்கு.. காந்தி நினைவிடத்தில் மரியாதை..சிபிஐ முன் ஆஜர் ஆனார் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. இதையடுத்து இன்று காலை 11 மணியளவில் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு புதிய மதுபான கொள்கை விவகாரம் பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது. கடந்த 2021-22 ஆம் ஆண்டு கெஜ்ரிவால் அரசால் வெளியிடப்பட்ட புதிய மதுபான கொள்கையில் உள்ள சில முக்கிய விஷயங்கள் முன்கூட்டியே கசியவிடப்பட்டதாகவும் இதனால், சில தனியார் நிறுவனங்கள் லாபம் அடைந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
அதாவது, உரிமக்கட்டணத்தைத் தள்ளுபடி செய்தல், குறைத்தல் உள்ளிட்டவற்றில் ஊழல் நடந்ததாகவும் இதில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் பணம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து டெல்லி துணை நிலை ஆளுநர் மதுபான கொள்கை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தார்.
இதன்படி, சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசரணை நடத்தி வருகிறது. இதே வழக்கில் சட்ட விரோத பணப்பரிமாற்றங்கள் தொடர்பாக மத்திய அமலாக்கத்துறையும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது. மதுபான கொள்கையை உருவாக்கிய போது அந்த துறையை தன் வசம் வைத்திருந்த மணிஷ் சிசோடியா மீது வழக்குப்பதிவு செய்த சிபிஐ முறைகேடு புகார்கள் விசாரணை நடத்தியது.

தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவராகவும் டெல்லி துணை முதல்வராகவும் இருந்த மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டது தேசிய அளவில் கவனம் பெற்றது. இந்த நிலையில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது.
இதன்படி இன்று டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜரானார். அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகும் முன் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினார். அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர் ஆகியிருக்கும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் சிபிஐ அலுவலகம் அமைந்துள்ள பகுதிகளில் குவிந்தனர். இதனால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications