"என்னா மனுசன்".. விமானத்திற்கு போலி வெடிகுண்டு மிரட்டல்.. நண்பனின் 'லவ்'வுக்காக இளைஞர் செய்த காரியம்
டெல்லி: தனது நண்பர்களின் காதலை சேர்த்து வைக்கும் நோக்கத்துடன் இளைஞர் ஒருவர் ஸ்பைஸ் ஜெட் விமானத்திற்கு போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
நண்பர்களின் காதலிகள் விமானத்தில் புறப்படுவதை தடுப்பதற்காக போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் அளவுக்கு துணிந்திருக்கிறார் அந்த இளைஞர்.
சினிமா பாணியில் அனைத்து ஸ்கெட்சுகளையும் பக்காவாக போட்டு விமானத்திற்கு போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர், 'மண்டை மேல் இருக்கும் கொண்டையை மறந்துட்டோமே' என்பதை போல பதற்றத்தில் செய்த தவறால் போலீஸிடம் வசமாக சிக்கியுள்ளார்.
நடு வானில் திடீரென குலுங்கிய ஸ்பைஸ் ஜெட் விமானம்! மிரண்டு போன பயணிகள்.. 14 பேர் படுகாயம்! என்னாச்சு
திடீர் வெடிகுண்டு மிரட்டல்
டெல்லியில் இருந்து புனேவுக்கு நேற்று மாலை புறப்பட ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று தயாராக இருந்தது. விமானம் புறப்பட ஒருசில நிமிடங்களே இருந்த நிலையில், ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு போன் செய்த மர்ம நபர், குறிப்பிட்ட அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறி அழைப்பை துண்டித்தார். இதனால் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையமே பரபரப்பானது. பின்னர், பயணிகள் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டு விமானத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் அது போலி வெடிகுண்டு மிரட்டல் என்பது தெரியவந்தது. இதையடுத்து, சில மணிநேர தாமதத்திற்கு பிறகு விமானம் புனேவுக்கு புறப்பட்டது.
சிக்கிய இளைஞர்
இதனைத் தொடர்ந்து, இதுகுறித்து டெல்லி போலீஸாருக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் புகார் அளித்தது. இதன்பேரில், சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணின் டவரை ஆராய்ந்த போது, அது டெல்லியின் துவாரகா பகுதியில் உள்ள ஒரு முகவரியை காட்டியது. பின்னர் அந்த முகவரிக்கு சென்ற போலீஸார், அங்கிருந்த அபினவ் பிரகாஷ் (24) என்ற இளைஞரை பிடித்து விசாரித்தனர். முதலில், தனக்கு எதுவும் தெரியாது என மழுப்பிய அபினவ் பிரகாஷ், ஒருகட்டத்தில் போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை ஒப்புக் கொண்டார்.
நண்பர்களின் காதல்..
விசாரணையில், தனது நண்பர்களின் காதலை சேர்த்து வைப்பதற்காகவே இந்த காரியத்தில் ஈடுபட்டதாக அவர் கூறினார். அதாவது, அபினவ் பிரகாஷுக்கு ராகேஷ் மற்றும் குணால் ஆகிய இரு நண்பர்கள் இருந்துள்ளனர். இவர்கள் அண்மையில் மணாலிக்கு சென்றபோது அங்கு இரு பெண்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்தப் பெண்களை அழைத்துக் கொண்டு ராகேஷும், குணாலும் டெல்லிக்கு வந்துள்ளனர். டெல்லியில் ஒரு நாள் முழுவதும் அவர்களுடன் செலவிட்ட அந்த இளம்பெண்கள் தங்கள் சொந்த ஊரான புனே செல்வதற்காக நேற்று ஸ்பைஸ் ஜெட் விமானத்தை புக் செய்தனர்.
காதலை 'புரப்போஸ்' செய்வதற்காக..
இந்நிலையில், இளம்பெண்களுடன் ஒருநாள் முழுக்க செலவிட்ட அபினவ் பிரகாஷின் நண்பர்களான குணாலுக்கும், ராகேஷுக்கும் அவர்கள் மீது காதல் உருவானது. எப்படியாவது புரப்போஸ் செய்துவிடலாம் என்பதற்குள் அவர்கள் புனே புறப்பட்டு விட்டார்களே என அவர்கள் ஆதங்கப்பட்டுள்ளனர். நண்பர்களின் இந்த புலம்பலை கேட்ட அபினவ் பிரகாஷ், "இப்போ என்ன பண்ணனும்.. அவங்க புனே போகக் கூடாதா?" எனக் கேட்டுள்ளார். நண்பர்களும் அதற்கு ஆம் எனக் கூறியுள்ளனர்.
சிக்கி சின்னாபின்னம்..
இதையடுத்து, போலி முகவரியில் சிம் கார்டு வாங்கிய அபினவ், அதை பயன்படுத்தி ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர், அடுத்த நிமிடமே விமானத்திற்குள் இருந்த இரண்டு பெண்களையும் தொடர்பு கொண்ட அபினவ் பிரகாஷ், "விமானம் இன்று புனே செல்லாது. வெளியே வாருங்கள்" என கெத்தாக கூறியுள்ளார். எந்த எண்ணில் இருந்து விமான நிறுவனத்திற்கு அவர் போன் செய்தாரோ அதே எண்ணில் இருந்து அந்தப் பெண்களுக்கும் போன் செய்ததால் போலீஸில் சிக்கியிருக்கிறார் அபினவ். தற்போது அபினவை கைது செய்துள்ள போலீஸார், தலைமறைவாகியுள்ள அவரது நண்பர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.