டெல்லி அமைச்சருக்கு மீண்டும் சோதனை; இறுக்கி பிடிக்கும் அமலாக்கத்துறை...!
டெல்லி: டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஹவாலா பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் கடந்த மே. 30ஆம் தேதி டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சத்யேந்திர ஜெயினுக்கு, ஜூன் 9ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.
வழக்கு என்ன?
2015-16ஆம் ஆண்டில் அமைச்சராக இருந்தபோது சத்யேந்திர ஜெயின் மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயர்களில் பதியப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு போலி நிறுவனங்கள் மூலம் ரூ. 4.81 கோடி பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் அவருக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
பணம், தங்கம் பறிமுதல்
இதனைத்தொடர்ந்து சத்யேந்திர ஜெயின் வீடு, அலுவலகம் மற்றும் உறவினர்கள் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சத்யேந்திர ஜெயின் தொடர்பான இடங்களில் இருந்து ரூ.2.82 கோடி பணம், 133 தங்க நாணயங்கள் உள்ளிட்ட 1.80 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்
இந்தநிலையில் இன்று மீண்டும் அமலாக்கத்துறையினரால் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத்துறை தரப்பில், சத்யேந்திர ஜெயின் பல்வேறு நிறுவனங்கள் மூலம் ரூ.16.39 கோடி கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றியதாக தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், அவரின் வாக்குமூலத்தை அவரே எழுதுவதால் விசாரணைக்கு அதிக நேரம் பிடிப்பதாக கூறப்பட்டது.
நீதிமன்ற காவல் நீட்டிப்பு
அமைச்சர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார். அவரது வாதத்தை நிராகரித்த நீதிபதிகள் அமைச்சர் சத்யேந்திர ஜெயினின் நீதிமன்ற காவலை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டனர். அமைச்சரை கைது செய்ததன் மூலம் ஏற்கனவே ஆம் ஆத்மி - பாஜக கட்சிகளுக்கு இடையே உரசல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.