மோடி பதவியேற்று 7 ஆண்டுகள் நிறைவு- விவசாயிகள் அழைப்பை ஏற்று நாடு முழுவதும் கறுப்பு தினம் கடைபிடிப்பு
டெல்லி: நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்று 7 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைகிறது. டெல்லியில் விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் அழைப்பை ஏற்று இன்றைய நாள் நாடு முழுவதும் கறுப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டது.

மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடும் குளிர், கடும் வெயில், கொரோனா பாதிப்பு என அத்தனைக்கும் மத்தியில் 6 மாதங்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால் மத்திய அரசின் விவசாய சட்டங்கள் திரும்பப் பெறப்படவில்லை.

அதேநேரத்தில் 3 விவசாய சட்டங்கள் திரும்பப் பெறப்படும் வரை தங்களது போராட்டம் ஓயாது என்றும் விவசாயிகள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் பிரதமர் மோடி பதவியேற்று இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைகிறது.
விவசாயிகள் விரோத சட்டங்களைக் கொண்டு வந்த பிரதமர் மோடி பதவியேற்ற இன்றைய நாளை (மே 26) நாடு முழுவதும் கறுப்பு தினமாக கடைபிடிக்க வேண்டும் என்று டெல்லியில் போராடும் விவசாயிகள் அழைப்பு விடுத்திருந்தனர். இந்த அழைப்புக்கு திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், ஆம் ஆத்மி உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

இந்நிலையில் இன்று பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் விவசாயிகள் வீடுகள், வாகனங்களில் கறுப்பு கொடி ஏற்றி கறுப்பு தினத்தை கடைபிடித்தனர். தமிழகத்திலும் அரசியல் கட்சிகளின் அலுவலகங்களில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications