"கெமிக்கல்" பாம்? நகரும் போதே வெடித்து சிதறிய கார்! டெல்லி வெடிப்பு.. வெளியான அதிர வைக்கும் தகவல்
டெல்லி: தலைநகர் டெல்லியின் செங்கோட்டை அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பலர் உயிரிழந்தனர். இதற்கிடையே காஷ்மீர் மற்றும் ஹரியானா போலீசார் கடந்த சில நாட்களாகக் கைது செய்த "ஒயிட் காலர்" பயங்கரவாத அமைப்புக்கும் இந்தச் சம்பவத்திற்கும் இடையே தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட கெமிக்கல் குறித்தும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை கார் ஒன்று எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியது. மெட்ரோ அருகிலேயே மாலை நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்தது. அப்போது அதிக மக்கள் அங்கிருந்த நிலையில், பாதிப்புகள் அதிகமானது. இந்தச் சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த வெடிப்பு நடந்த கார் தெற்கு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் வசித்து வந்த மருத்துவர் ஒருவருக்குச் சொந்தமானது என்பது விசாரணையில் தெரிய வந்தது. இச்சம்பவம் தீவிரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் இப்போது விசாரிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக உபா சட்டத்தின் 16 மற்றும் 18 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், வெடிபொருள் சட்டத்தின் 3 மற்றும் 4 பிரிவுகளுடன் கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகளிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உமர் முகமது
காரின் உரிமையாளரான டாக்டர் உமர் முகமது, அச்சம் காரணமாகவே செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாகக் கூறப்படுகிறது. சந்தேகப்படும் தீவிரவாத அமைப்பின் முக்கிய உறுப்பினர்களான டாக்டர் முஜம்மில் ஷகீல் மற்றும் டாக்டர் ஆதில் ரதர் ஆகியோர் சமீபத்தில் தான் கைது செய்தனர். ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் 2,900 கிலோ சந்தேகத்திற்கிடமான வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இது நடந்து சில மணி நேரத்தில் இந்த கார் வெடிப்பு நடந்துள்ளது.
உண்மையில் காரை மத்திய டெல்லியில் எதாவது ஒரு இடத்தில் வைத்துத் தான் வெடிக்கத் திட்டம் போட்டு இருக்கலாம். ஏனென்றால் இந்தக் கார் செங்கோட்டையிலிருந்து நகரின் மையப்பகுதியை நோக்கிச் செல்லும்போது வெடித்துச் சிதறியது. இதனால் மத்திய டெல்லியில் ஒரு இடம் இலக்காக இருக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமோனியம் நைட்ரேட்
அதிகப் பாதிப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே கெமிக்கல் காம்பவுண்ட் அமோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டதாகக் காவல்துறை கூறுகிறார்கள். ஹரியானாவில் பறிமுதல் செய்யப்பட்ட பொருளும் அமோனியம் நைட்ரேட் என சந்தேகிக்கப்படுகிறது. இது உரங்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும் வெடிகுண்டுகள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படலாம்.
இது தொடர்பாகக் காவல்துறை ஆணையர் சதீஷ் கோல்சா கூறுகையில், "மெதுவாகச் சென்ற வாகனம் சிக்னலில் நின்றபோது, அதில் ஒரு வெடிவிபத்து நிகழ்ந்தது. இதன் காரணமாக அருகிலிருந்த வாகனங்களும் சேதமடைந்தன" என்று தெரிவித்தார்.
ஷாக்
செங்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதியும், சாந்தினி சௌக் சந்தையும் நகரத்தின் மிகவும் பரபரப்பான இடங்களில் ஒன்றாகும். கார் வெடிப்பால் அங்குச் சிதைந்த உடல்களும், ரத்தக் கறைகளும் சாலை முழுவதும் சிதறிக் கிடந்தன. இந்த தீ விபத்தில் குறைந்தது ஆறு கார்களும், பல மோட்டார் ரிக்ஷா டாக்சிகளும் எரிந்து நாசமாகின.
விசாரணை
இந்தச் சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறை, ஜம்மு காஷ்மீர் காவல்துறை, என்ஐஏ, என்எஸ்ஜி, உளவுத்துறை, உ.பி. ஏடிஎஸ், ஹரியானா காவல்துறை, குஜராத் காவல்துறை மற்றும் தடயவியல் குழுக்கள் இணைந்து விசாரணையை நடத்தி வருகின்றன. ஜம்மு காஷ்மீர் காவல்துறை புல்வாமாவைச் சேர்ந்த தாரிக் என்ற நபரைத் தடுத்து வைத்துள்ளது. தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வாகனம் பலமுறை கைமாறியதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
முதற்கட்ட அறிக்கைகளின்படி, கார் முதலில் அமீர் என்ற நபருக்கு விற்கப்பட்டு, பின்னர் தாரிக்குக்கு கைக்குப் போய் இருக்கிறது. கடைசியாக அது உமருக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications