ஒரு ஃபைல் கூட வெளியே போக கூடாது.. ரிசல்ட் வரும்போதே டெல்லி தலைமை செயலகத்தை கண்ட்ரோலில் எடுத்த பாஜக!
டெல்லி: டெல்லி தலைமைச் செயலகத்தில் இருந்து ஆவணங்களை வெளியே எடுத்துச் செல்ல பொது நிர்வாகத்துறை தடை வித்துள்ளது. ஆவணங்கள், ஹார்டு டிஸ்க்குகள், மின்னணு கோப்புகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில் பொது நிர்வாகத்துறை திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லி சட்டப்பேரவையின் 70 தொகுதிகளுக்கு பிப்ரவரி 5 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகளின்படி, பாஜக ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெற்று வெற்றியடைந்துள்ளது. இதன்மூலம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக டெல்லி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.

டெல்லியில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி, 22 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தைக் கூட பெற முடியவில்லை. ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆட்சி அமைக்கத் தேவையான தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தொண்டர்கள் பட்டாசு வெடித்து வெற்றியைக் கொண்டாடினர். டெல்லி சட்டமன்றத்தில், 27 ஆண்டுகளுக்குப் பிறகூ பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.
பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்த நிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் பாஜகவின் வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி இதில் பங்கேற்று பேசுகையில், "இன்றைய வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது. இது சாதாரண வெற்றி அல்ல. டெல்லி மக்கள் பேரழிவை விரட்டியடித்துள்ளனர் " என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, டெல்லியில் பாஜக வெற்றி அறிவிப்புகள் வந்து கொண்டிருந்தபோதே பொது நிர்வாகத்துறை சார்பில் முக்கிய அறிவுறுத்தல் ஒன்று வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. டெல்லி தலைமைச் செயலகத்தில் இருந்து ஆவணங்கள், ஹார்டு டிஸ்க்குகள், மின்னணு கோப்புகளை எடுத்துச் செல்லக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவின் உத்தரவின்படி, டெல்லி அரசின் பொது நிர்வாகத்துறை ஒரு சர்குலரை அனுப்பியுள்ளது. பதிவுகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பொது நிர்வாகத்துறையின் அனுமதியின்றி எந்த கோப்புகள் அல்லது ஆவணங்கள், கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் போன்றவற்றை டெல்லி தலைமைச் செயலக வளாகத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்லக்கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
டெல்லி தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள துறைகள், அலுவலகங்களின் கீழ் உள்ள சம்பந்தப்பட்ட கிளைப் பொறுப்பாளர்களுக்கு, அவர்களின் பிரிவுகள் /கிளைகளின் கீழ் உள்ள பதிவுகள், கோப்புகள், ஆவணங்கள், மின்னணு கோப்புகள் போன்றவற்றின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், டெல்லி தலைமை செயலகத்துக்குள் வெளி நபர்கள் யாரும் உள்ளே நுழைய முடியாத வகையில் தடுப்பும் அமைக்கப்பட்டுள்ளது. பாஜக அதிக இடங்களில் வெற்றிக் கணக்கைத் தொடங்கியதுமே, தலைமைச் செயலகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து விட்டதாகத் தெரிகிறது.
பிரதமர் மோடி இன்று வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வில் பேசுகையில், "டெல்லியில் நடந்த ஒவ்வொரு ஊழலும் விசாரிக்கப்படும். கொள்ளையடிக்கப்பட்டது எல்லாம் திரும்பக் கொண்டுவரப்படும்" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications