பிரதமர் அலுவலகம் முற்றுகை.. காங்கிரஸ் கட்சியினரை தடுக்க போலீஸ் குவிப்பு.. பரபர டெல்லி
டெல்லி: விலைவாசி உயர்வு, பணவீக்கம் உள்ளிட்டவற்றை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதையொட்டி டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்து வரும் நிலையில் போராட்டம் நடத்த தடை விதித்து 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Recommended Video
மத்தியில் பாஜக ஆட்சி நடத்தும் நிலையில் எதிர்க்கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக அரசு தவறாக பயன்படுத்துவதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
அதோடு பணவீக்கம், விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்டவை தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து எதிர்க்கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றன. இதுதொடர்பாக அவர்கள் நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து குரல் கொடுத்தனர்.

இந்தியா முழுவதும் சோதனை
இந்நிலையில் தான் விலைவாசி உயர்வு, வேலையின்மை, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும் எனக்கூறி காங்கிரஸ் சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவததோடு, ஆளுவர் மாளிகையை நோக்கி ஊர்வலம் செல்ல உள்ளனர்.

டெல்லியில் போராட்டம்
டெல்லியை பொறுத்தமட்டில் போராட்டம் நடத்தும் முனைப்புடன் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இன்று காலை முதலே அங்குள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்துள்ளனர். எம்பிக்கள், மூத்த தலைவர்களும் அங்கு திரண்டுள்ளனர். இதனால் போராட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது.

பிரதமர் இல்லம் முற்றுகை
மேலும் காங்கிரஸ் சார்பில் டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தை முற்றுகையிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் எம்பிக்கள் சார்பில் நாடாளுமன்றத்தில் இருந்து ஜனாதிபதி மாளிகை நோக்கி ஊர்வலம் செல்ல உள்ளனர். இந்நிலையில் தான் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தை தடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

எச்சரிக்கை நோட்டீஸ்- போலீஸ் குவிப்பு
முன்னெச்சரிக்கையாக போராட்டத்துக்கு அனுமதி வழங்காத போலீசார் 144 தடை உத்தரவும் பிறப்பித்துள்ளனர். இதனை மீறி போராட்டம் நடத்தினால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபாலுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் நோக்கத்தில் டெல்லியின் பல இடங்களில் போலீசார், பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ராகுல் பத்திரிகையாளர் சந்திப்பு
இதற்கிடையே டெல்லி காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளார். இந்த வேளையில் புள்ளி விபரங்களோடு மத்திய அரசை அவர் விமர்சனம் செய்ய உள்ளார். இந்த சந்திப்பு பிறகு போராட்டங்கள் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications