உறைய வைக்கும் குளிர்... அதிகரிக்கும் கட்டுப்பாடு... புத்தாண்டை எதிர்நோக்கும் தலைநகர்
டெல்லி: இந்த ஆண்டிலேயே மிகக் குறைந்த வெப்ப நிலையாகத் தலைநகர் டெல்லியில் புத்தாண்டின்போது 3.3 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என்று இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புத்தாண்டு இரவு டெல்லியில் மிகக் கடுமையான குளிர் காற்று வீசும் என்றும் இதனால் தலைநகரில் வெப்பநிலை மிகவும் குறையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில், "வழக்கமாக இருப்பதைவிட இந்தாண்டு டெல்லியில் வெப்பநிலை 4 டிகிரி குறைவாக உள்ளது. ஜனவரி 2ஆம் தேதி இரவு முதல் தலைநகரில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கிறோம்.
மேலும், ஜனவரி இரண்டாவது வாரத்தில் கடுமையான குளிர் அலை டெல்லியில் மீண்டும் ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம். புத்தாண்டு தினத்தில் 3.3 டிகிரி செல்சியஸைவிட வெப்பநிலை குறையவும் வாய்ப்புள்ளது" என்று தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர், லடாக், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களிலும் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தலைநகரில் காற்று தர மதிப்பீடு மிக மோசம் என்ற நிலையிலேயே தொடர்வதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. டெல்லியில் 15கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் காற்று மாசு மேலும் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, புத்தாண்டு கொண்டாட்டங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை நகரில் பொதுமக்கள் ஒன்றுகூட டெல்லி அரசு தடை விதித்து.
உருமாறிய கொரோனா பரவல் காரணமாகப் புத்தாண்டு கொண்டாட்டங்களைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.