டெல்லியில் திரிணாமுல் அலுவலகம், எம்பி அபிஷேக் பானர்ஜி வீடு மீது தாக்குதல்
டெல்லி: டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகம் மற்றும் அக்கட்சியின் எம்பியும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் உறவினருமான அபிஷேக் பானர்ஜியின் வீடு ஆகியவை தாக்குதலுக்குள்ளாகின.
மேற்கு வங்க சட்டசபைக்கு 2021-ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இப்போதே அந்த மாநில சட்டசபை தேர்தல் பிரசார களம் கொந்தளிப்பாக உள்ளது.

மேற்கு வங்கத்தில் 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் பாதுகாப்பு வாகனம் மீது திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். ஆனால் இந்த தாக்குதலை திரிணாமுல் காங்கிரஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது பாஜகவின் நாடகம் எனவும் விமர்சித்திருக்கிறது.
ஜேபி நட்டா மீதான தாக்குதல் பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த நிலையில் டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகம், மமதா பானர்ஜியின் உறவினரான அபிஷேக் பானர்ஜியின் இல்லம் ஆகியவற்றை மர்ம நபர்கள் தாக்கினர். மேலும் மமதா பானர்ஜி, அபிஷேக் பானர்ஜிக்கு எதிராகவும் அவர்கள் முழக்கம் எழுப்பினர்.
அத்துடன் புதுடெல்லி சாணக்கியபுரியில் உள்ள மேற்கு வங்க மாநில அரசின் விருந்தினர் மாளிகையான பங்களா பவன் மீதும் நேற்று இரவு மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக இதுவரை போலீசில் புகார் கொடுக்கப்படவில்லை. இருப்பினும் பாஜகவினரே டெல்லி தாக்குதல்களுக்கு காரணம் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications