630 பேர் கைது.. பின்னணியில் தொழில்முறை ரவுடிகள்.. டெல்லி கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 46 ஆனது!
டெல்லி: டெல்லி கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி கலவரத்தில் 275 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
டெல்லி கலவரம் நடந்து முடிந்து 3 நாட்கள் ஆகியும் அதன் பாதிப்பு இன்னும் தலைநகரில் போகவில்லை. டெல்லியில் சிஏஏ போராட்டத்தில் பெரிய அளவில் கலவரம் ஏற்பட்டது. டெல்லியில் கடந்த பிப்ரவரி 25 மற்றும் 26 தேதிகளில் ஜப்பார்பேட், மவ்ஜ்பூர், சாந்த்பாக், குர்ஜீ காஸ், பஜன்பூரா ஆகிய பகுதிகளில் கடுமையான கலவரம் நடந்தது.
இதில் இஸ்லாமியர்கள், இந்துக்கள் என்று பல தரப்பினர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் டெல்லியில் இருந்து பல ஆயிரம் இஸ்லாமியர்கள் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

டெல்லி கலவரம்
டெல்லி கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி கலவரத்தில் 275 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த கலவரத்தில் காயம் அடைந்த பலர் டெல்லியில் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.அதன்படி டெல்லியில் ஜிடிபி மருத்துவமனை, லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனை, ஜாக் பர்வேஷ் சந்திரா மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் இவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கைது
டெல்லி கலவரம் தொடர்பாக இதுவரை 150 பேர் எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது.இதில் 28 பேர் மீது ஆயுத தடுப்பு சட்டத்தின் பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. 630 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். டெல்லியில் கலவரம் நடந்த இடங்களில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கலவரம் நடந்த பகுதியில் இருந்து பொருட்கள் சேகரிக்கப்பட்டு, தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.

துப்பாக்கி சூடு
துப்பாக்கி குண்டுகளும் கைப்பற்றப்பட்டு சோதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் கலவரம் நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகள் பெறப்பட்டு வருகிறது. இந்த காட்சிகளும் விசாரணை செய்யப்படும். டெல்லி கலவரத்தில் தொழில்முறை ரவுடிகள் சிலரும் கலந்து கொண்டு, பொது சொத்துக்களை உடைத்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக போலீஸ் சந்தேகத்தை வெளிப்படுத்தி உள்ளது.

எங்கும் கலவரம்
டெல்லியில் புதிதாக எங்கும் கலவரம் குறித்த புகார்கள் கடந்த இரண்டு நாட்களாக வரவில்லை. ஆனாலும் டெல்லியில் பாதுகாப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தொடர்ந்து டெல்லி பாதுகாப்பை கண்காணித்து வருகிறார். டெல்லியில் அமைதியை நிலைநாட்டுவதற்காக 25க்கும் மேற்பட்ட அமைப்புகளுடன் போலீஸ் சார்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications