டெல்லியில் மிக மோசமான தீ விபத்து.. 800 குடிசைகள் எரிந்து நாசம்.. இருவர் பரிதாபமாக உயிரிழப்பு!
டெல்லி: டெல்லி ரோஹினியின் செக்டார் 17இல் அமைந்துள்ள ஒரு குடிசைப் பகுதியில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. முதலில் ஒரு குடிசையில் ஏற்பட்ட தீ, படுவேகமாக மற்ற குடிசைகளுக்கும் பரவியது. இந்த தீ விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 800க்கும் மேற்பட்ட குடிசைகள் நாசமடைந்துள்ளன.
நமது நாட்டில் இன்னுமே பல இடங்களில் மக்கள் குடிசைகளில் தான் வாழ்கிறார்கள். வெயிலாக இருந்தாலும், மழையாக இருந்தாலும் குடிசையில் வாழ்வோரின் பாடு திண்டாட்டம் தான். குடிசைகளுக்குப் பதிலாக கான்கரீட் வீடுகளை அமைத்துத் தர அரசு நடவடிக்கை எடுத்தாலும் அது இன்னும் முழுமை பெறவில்லை. மறுபுறம் குடிசைப் பகுதிகளில் விபத்துகளும் ஆங்காங்கே ஏற்பட்டு வருகிறது.

டெல்லி தீ விபத்து
அப்படித் தான் இன்று டெல்லியில் மிக மோசமான ஒரு விபத்து நடந்துள்ளது. டெல்லி ரோஹினியின் செக்டார் 17இல் அமைந்துள்ள ஒரு குடிசைப் பகுதியில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. முதலில் ஒரு குடிசையில் ஏற்பட்ட தீ, படுவேகமாக மற்ற குடிசைகளுக்கும் பரவியது. இந்த மோசமான விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இறந்த இருவரின் உடல்களும் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன. மேலும், தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட இரண்டு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.
என்ன நடந்தது
இது தொடர்பாகத் தீயணைப்புத் துறை அதிகாரி சட்டோபாத்யாய் கூறுகையில், "பகல் 11:55 மணிக்கு எங்களுக்கு தீ விபத்து குறித்த தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்தவுடன் -5 தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர். இங்குப் பாதைகள் குறுகலாக இருந்ததால்... தீ ஏற்பட்ட இடத்தை எங்கள் வாகனங்களால் அடைய முடியவில்லை. தீயின் தீவிரத்தைக் கண்டு, கூடுதல் வாகனங்களை அங்கு அனுப்பினோம்.
மொத்தம் 26 வாகனங்கள் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளன... தீக்காயங்களுடன் இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டனர், அவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்... தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. போலீசார் தீ விபத்து குறித்து விசாரித்து வருகிறார்கள்" என்றார்.
காரணம் என்ன
அந்தப் பகுதியில் முதலில் ஒரு குடிசையில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. பிறகு அந்த தீ மளமளவென மற்ற குடிசைகளுக்கும் பரவியுள்ளது. அதேநேரம் தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. போலீசார் இது குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இன்று டெல்லியில் அதீத வெப்பம் பதிவாகி இருந்தது. அதுவும் கூட தீ மளமளவென பரவ காரணமாக இருந்திருக்கலாம். மேலும், இந்த விபத்தில் அந்தப் பகுதியில் இருந்த 800+ குடிசைகள் நாசமாகின. இதனால் அங்கு வாழும் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications