“PayPM”.. மோடியின் கோடீஸ்வர நண்பர்களுக்காக பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டது - ராகுல் காந்தி பரபர
டெல்லி: கடந்த 2016 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி தனது 2 அல்லது 3 பணக்கார நண்பர்களுக்காகவே பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டார் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருக்கிறார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி இரவு 8 மணியளவில் பிரதமர் மோடி பயன்பாட்டில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுக்கள் செல்லாது என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
இந்தியாவின் பொருளாதாரத்தையும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையையும் புரட்டிப்போடும் அறிவிப்பாக அது மாறியது. இந்த அறிவிப்பு வெளியிட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளன.
டிவியில் மோடி.. ஏடிஎமில் மக்கள் -அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே! பணமதிப்பிழப்பை மறக்க முடியுமா?
ராகுல் காந்தி ட்வீட்
இதனை முன்னிட்டு ட்விட்டரில் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், "பணமதிப்பிழப்பு என்பது இந்தியாவின் சிறு குறு தொழில்களை நசுக்கி பிரதமர் நரேந்திர மோடியின் கோடீஸ்வர நண்பர்களில் 2 - 3 பேரை ஏகபோகமாக மாற்ற PayPM ஆல் எடுக்கப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கை." என விமர்சித்து இருக்கிறார்.
கருப்பு பண ஒழிப்பு
இந்தியாவில் புழக்கத்தில் உள்ள கருப்பு பணத்தையும் கள்ளநோட்டையும் ஒழிப்பேன் என்று கூறி பிரதமர் நரேந்திர மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டார். அன்று இரவு முதல் வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களின் வாயில்களில் பணத்தை எடுக்க கோடிக்கணக்கான மக்கள் காத்து கிடந்தனர்.
மக்கள் உயிரிழப்பு
மதிப்பிழப்பு செய்யப்பட்ட இந்த பணத்துக்கு மாற்றாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. பிரதமர் மோடி வெளியிட்ட இந்த திடீர் அறிவிப்பால் நாடு முழுவதும் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டனர். ஏடிஎம், வங்கி வாயில்களில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
உச்சநீதிமன்றம் வேதனை
பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக மக்கள் எதிர்கொண்டு வரும் சிரமங்களை நினைத்து கவலை அடைகிறோம் என தெரிவித்தது.