3ஆம் அலை அச்சம்.. சர்வதேச விமான சேவைக்கு செப் 30ஆம் தேதி வரை தடை நீட்டிப்பு.. மத்திய அரசு உத்தரவு
டெல்லி: கொரோனா அச்சம் இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில், வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை சர்வதேச விமான போக்குவரத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகின் அனைத்து நாடுகளும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ் பாதிப்பு தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருவதால் எந்தவொரு நாட்டினாலும் இதை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை.
கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் வேக்சின் பணிகள் மூலம் வைரஸ் பாதிப்பை சில நாடுகள் மட்டும் கட்டுக்குள் வைத்துள்ளன. இதனால், வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு நாடுகளும் வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

சர்வதேச விமான போக்குவரத்து
இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்திற்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தத் தடையை தற்போது செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் சர்வதேச விமான போக்குவரத்திற்கு அனுமதி அளிப்பது குறித்தும் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவிக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் தடை
இது குறித்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள உத்தரவில், "செப்டம்பர் 30ஆம் தேதி 11.59 மணி வரை சர்வதேச விமான போக்குவரத்திற்குத் தடை விதிக்கப்படுகிறது. அதேநேரம் சரக்கு விமானப் போக்குவரத்துக்கு எந்தத் தடையுமில்லை. அவை வழக்கம் போல இயங்கலாம், மேலும், air bubble ஒப்பந்தத்தில் உள்ள நாடுகளுடனும் விமான போக்குவரத்து தொடரலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1.5 ஆண்டுகள்
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியதால், கடந்த ஆண்டு மார்ச் 23ஆம் தேதி முதல் சர்வதேச விமானச் சேவைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது 1.5 ஆண்டுகளாகச் சர்வதேச விமான போக்குவரத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வெளிநாட்டில் சிக்கியுள்ளவர்களைத் தாயகம் அழைத்து வர வந்தே பாரத் திட்டத்தின் மூலம் கடந்தாண்டு மே மாதம் முதல் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது.
Recommended Video

air bubble என்றால் என்ன
அதேபோல air bubble ஒப்பந்தத்தின் கீழ் 25 நாடுகளுக்குச் சர்வதேச விமான போக்குவரத்து தொடர்கிறது. air bubble என்பது இரு நாடுகள் போட்டுக்கொள்ளும் ஒரு ஒப்பந்தமாகும். பொதுவாக கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் இரண்டு நாடுகள் இந்த air bubble ஒப்பந்தத்தை மேற்கொள்ளும். சர்வதேச விமான போக்குவரத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், இந்த ஒப்பந்தத்தின் கீழ் விமானங்களை இயக்கலாம். இந்தியா கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த air bubble திட்டத்தில் விமானங்களை இயக்கி வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அமீரகம், பிரான்ஸ் உள்ளிட்ட 25 நாடுகளுடன் இந்தியா இந்த air bubble ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

விமானத்துறை
கொரோனா பெருந்தொற்று தொடங்கியதில் இருந்தே மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்றாக விமானத்துறை உள்ளது. இருப்பினும், அனைவரும் எதிர்பார்த்ததைக் காட்டிலும் விமானச் சேவை மிக வேகமாக மீண்டு வருகிறது. அதேநேரம் கொரோனா காரணமாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக விமான நிறுவனங்களின் வருவாய் கணிசமாகக் குறைந்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு மே இறுதியில் உள்நாட்டு விமானச் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications