உள்ளாட்சி தேர்தலால் ஏற்பட்ட சண்டை.. காங். கூட்டத்தை புறக்கணித்த திமுக.. ஸ்டாலின் அதிரடி முடிவு!
திமுகவிற்கும் தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கும் இடையே ஏற்பட்டு இருக்கும் மனக்கசப்பு காரணமாக டெல்லியில் நடக்கும் காங்கிரஸ் கமிட்டியின் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை திமுக புறக்கணித்துள்ளது.
டெல்லி: திமுகவிற்கும் தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கும் இடையே ஏற்பட்டு இருக்கும் மனக்கசப்பு காரணமாக டெல்லியில் நடக்கும் காங்கிரஸ் கமிட்டியின் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை திமுக புறக்கணித்துள்ளது.
டெல்லியில் குடியுரிமை காங்கிரஸ் கமிட்டியின் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடக்கிறது. சட்ட திருத்தம், என்ஆர்சி, ஜேஎன்யூ மாணவர்கள் தாக்கப்பட்டது, நாடு முழுக்க நடக்கும் போராட்டம் ஆகியவை குறித்து இதில் ஆலோசனை செய்யப்படுகிறது. அதேபோல் நடக்க உள்ள பட்ஜெட் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் என்ன செய்வது, என்ன பிரச்சனைகளை அவையில் எழுப்பலாம் என்றும் இதில் ஆலோசனை நடத்த உள்ளனர்.
எதிர்க்கட்சிகள் எல்லாம் கலந்து கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் இதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மொத்தம் 20 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
ஆனால் என்ன
ஆனால் எதிர்க்கட்சிகளில் மிக முக்கியமான கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இந்த ஆலோசனையில் கலந்து கொள்ளவில்லை. டெல்லி தேர்தல் காரணமாக ஆம் ஆத்மி இதில் கலந்து கொள்ளவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் இதில் கலந்து கொள்ளாது என்று இரண்டு நாட்களுக்கு முன்பே மமதா பானர்ஜி தெரிவித்துவிட்டார்.
ஆனால் திமுக
யாருமே எதிர்பார்க்காத வகையில் தற்போது திமுகவும் இந்த ஆலோசனை கூட்டத்தை தவிர்த்துள்ளது. திமுக கூட்டணியை சேர்ந்த விசிக இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளது. ஆனால் திமுக சார்பாக அதன் தலைவர் ஸ்டாலினோ, அல்லது வேறு எம்பிக்கள் யாரோ இதில் கலந்து கொள்ளவில்லை.
இப்படி இல்லை
இதற்கு முன் காங்கிரஸ் நடத்திய அனைத்து கூட்டங்களிலும் திமுக கலந்து கொண்டுள்ளது. திரிணாமுல், பகுஜன் சமாஜ் வாதி கூட்டங்களில் கூட திமுக கலந்து கொண்டுள்ளது. ஸ்டாலின் செல்ல முடியாத கூட்டங்களுக்கு திமுக சார்பாக மூத்த உறுப்பினர்கள் பிரநிதிகளாக சென்றுள்ளனர். ஆனால் இன்று அப்படி யாரும் செல்லவில்லை.
என்ன காரணம்
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் காரணமாக திமுக காங்கிரஸ் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த வாரம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ் அழகிரி கோபமாக அறிக்கை வெளியிட்டு இருந்தார். திமுக தங்களை ஏமாற்றிவிட்டது என்று குறிப்பிட்டு திமுகவிற்கு எதிராக அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
ஆனால் இல்லை
உள்ளாட்சி தேர்தலில் போதிய இடங்களை திமுக எங்களுக்கு அளிக்கவில்லை.ஒன்றியத்திற்கு, மாவட்டத்திற்கு தலைவர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். திமுகவின் செயல்பாடுகள் கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக இருந்தது என்று கே.எஸ் அழகிரி குறிப்பிட்டு இருந்தார். ஆனால் ஸ்டாலின் இதற்கு பதில் அளிக்கவில்லை.
சமாதானம்
இதனால்தான் திமுக இந்த ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்து இருக்கிறது என்கிறார்கள். காங்கிரஸ் இப்படி பொதுவில் பேசி இருக்க கூடாது. ஏதாவது மனக்கசப்பு இருந்திருந்தால் தனியாக பேசி இருக்கலாம். மாறாக காங்கிரஸ் பொதுவில் அறிக்கை வெளியிட்டு, திமுக குறித்து பேசி இருக்க கூடாது என்று ஸ்டாலின் கருதுகிறார்.
உண்மை காரணம்
இந்த கோபத்தை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமைக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த கூட்டத்தை திமுக புறக்கணித்துள்ளது என்கிறார்கள். இதனால் சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்கள் தமிழக காங்கிரஸ் கமிட்டி மீது கோபத்தில் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. திமுக எப்போதும் காங்கிரஸ் கட்சிக்கு உறுதுணையாக இருந்தது.
நல்ல துணை
அனைத்து விஷயங்களிலும் திமுக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்தது. ஆனால் திமுகவுடன் தமிழக காங்கிரஸ் தேவையில்லாமல் மனக்கசப்பை வளர்த்து வருகிறது, இது தவறு என்று தேசிய தலைமை புகார் வைத்துள்ளது. விரைவில் இதனால் தமிழக காங்கிரஸ் கட்சியில் சில அதிரடி மாற்றங்கள் வர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.