"கோமாளிகள்.." ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடமாட்டோம் என்ற மத்திய அரசு! பிரதமரை டேக் செய்து சீறிய ஆ ராசா
டெல்லி: மத்திய அரசு இணையச் சேவைகளுக்கான ஸ்பெக்ட்ரத்திற்கு லைசென்ஸ் முறையைப் பின்பற்ற உள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சரும் திமுக எம்பியுமான ஆ ராசா கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கடந்த சில நாட்களில் பல முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.. அப்படி மத்திய அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த முக்கிய சட்டங்களில் ஒன்று டெலிகாம் துறைக்கான புதிய வரைவு மசோதா.

இது தற்போது இத்துறையை நிர்வகிக்கும் 138 ஆண்டுகள் பழமையான இந்திய தந்தி டெலிகிராப் சட்டத்திற்குப் பதிலாக இருக்கும்.. இந்த மசோதாவில் சாட்டிலைட் இணையச் சேவைகளுக்கு ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்க ஏல முறைக்குப் பதிலாக உரிமம் வழங்கும் முறையை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.
லைசென்ஸ் முறை: எலான் மஸ்க் சாட்டிலைட்களை பயன்படுத்தி இணையச் சேவை வழங்கும் ஸ்டார்லிங்க் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதேபோல அமேசான் ப்ராஜெக்ட் கைபர், பிரிட்டிஷ் அரசு சப்போர்ட்டில் ஒன்வெப் எனப் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளன.
மற்ற நாடுகளில் லைசென்ஸ் முறை பின்பற்றப்படும் நிலையில், இந்தியாவில் மட்டும் ஏல முறை இருந்தால் மற்ற நாடுகளும் இதைப் பின்பற்றக் கூடும் என்றும் இதனால் செலவுகள் மற்றும் முதலீடுகளை அதிகரிக்கும்.. இதனால் மக்கள் அதிக செலவு செய்ய வேண்டி இருக்கும் என்பது இவர்கள் வாதம்.
அதேநேரம் இந்தியாவின் டாப் டெலிகாம் நிறுவனமான ஜியோ இந்த நடவடிக்கையை எதிர்த்திருந்தது. 5ஜி தொலைத்தொடர்பு ஏலம் விடப்பட்ட நிலையில், சாட்டிலைட் இணையச் சேவைகளுக்கு ஸ்பெக்ட்ரத்தையும் ஏலம் விட வேண்டும் என்பது அவர்கள் வாதம். உரிமம் முறையில் குறைந்த செலவில் அவர்களால் வாய்ஸ் கால் மற்றும் இணையச் சேவையை தர முடியும் என்பதால் இது சமமான போட்டியை உருவக்காது என்பது இவர்கள் வாதம்.
விமர்சனம்: இருந்த போதிலும் சாட்டிலைட் இணையச் சேவைகளுக்கு ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்க ஏல முறைக்குப் பதிலாக உரிமம் வழங்கும் முறையை மத்திய அரசு முன்மொழிந்தது. இருப்பினும், இது இணையத்தில் கடும் பேசுபொருளாக மாறியுள்ளது. ஏனென்றால் ஸ்பெக்ட்ரத்தை உரிமமாகத் தருவதற்குப் பதிலாக ஏலம் தர வேண்டும். இல்லையென்றால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதே இவர்கள் வாதம்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு சமயத்தில் கூட இது குறித்தே கேள்வி எழுப்பி இருந்தனர். அப்போது டெலிகாம் அமைச்சராக இருந்த ஆ ராசா ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடாமல் உரிமமாக வழங்கியதால் அரசுக்குப் பல ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்தச் சூழலில் சாட்டிலைட் இணையச் சேவைகளுக்கு ஸ்பெக்ட்ரத்திற்கு லைசென்ஸ் முறையைப் பின்பற்ற உள்ளதாக மத்திய அரசு கூறியது பேசுபொருளானது.

ஆ ராசா: இதற்கிடையே திமுகவின் ஆ ராசா இந்த விவகாரத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "அலைக்கற்றை Spectrum ஏலம் விடப்படவில்லை என்று என்னை எள்ளி நகையாடிய கோமாளிகள் இப்போது என்ன செய்கிறார்கள் என்று இந்த தேசம் பேசட்டும்! எலும்புத் துண்டுகளுக்கு இரையாகாத ஊடகங்கள் இருந்தால் இப்போதாவது ஏசட்டும்!!" என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.
மேலும், இந்த பதிவில் அவர் பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும் டேக் செய்துள்ளார். அ்வரது இந்த ட்வீட் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.












Click it and Unblock the Notifications