‘திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாக மாற்ற பாஜக முயற்சி’ – கனிமொழி ஷாக் தகவல்
டெல்லி: திருப்பரங்குன்றம் விவகாரம் தமிழ்நாட்டில் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் தீவிரமாக எதிரொலித்து வருகிறது. திமுக உறுப்பினர்கள் இதற்காக நாடாளுமன்றத்தில் எழுப்பியுள்ளனர். இதுகுறித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, திருப்பரங்குன்றம் விவகாரத்தை மற்றொரு அயோத்தியாக மாற்றிவிட வேண்டும் என்று சமூகவலைதளங்களில் பேசுகிறார்கள் என்று பாஜகவுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றம் என்று அனைத்து இடங்களிலும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் பாஜக மத அரசியல் செய்வதாக திமுக குற்றச்சாட்டு வைத்துள்ளது. நீதிபதி சுவாமிநாதன் மீதும் திமுக விமர்சனம் வைத்துள்ளது.

பாஜக மதக்கலவரம்
மறுபக்கம் திமுக இந்துக்களின் வழிபாட்டு உரிமையை மறுப்பதாக பாஜக குற்றம் சாட்டி வருகிறது. இந்த விவகாரம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடியாக பாஜக மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார். தமிழ்நாடு அரசை கண்டித்து பாஜகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி டெல்லியில் செய்தியாளர்களிடம், "திருப்பரங்குன்றம் அடிவாரத்தில் தான் தீபம் ஏற்றுவதுதான் வழக்கமாக இருந்தது. திடீரென்று எந்த மதத்திற்கும் சம்பந்தம் இல்லாத ஆங்கிலேயேர் காலத்தில் நில அளவை கல்லில் தீபம் ஏற்ற வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கையை பாஜக இப்போது கையில் எடுத்துள்ளது. இந்து மதத்திற்கு எதிராகவும், இந்துக்களின் மனது புண்படும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள்.
இன்னொரு அயோத்தி
நீதிமன்றம் தலையிட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில் தேவையில்லாத வகையில் நீதியரசர் சுவாமிநாதன் தலையிட்டு அரசை மீறி ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார். தமிழ்நாடு காவல்துறை தாண்டி அவர்கள் கட்டுப்பாட்டை எல்லாம் உடைத்து, மத்திய போலீஸை அனுப்பி அங்கு தீபம் ஏற்றும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளனர். அதை பயன்படுத்தி அங்கு மதக்கலவரத்தை உருவாக்குவதே பாஜகவின் நோக்கம்.
பொது மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் நிலையை உருவாக்கியுள்ளனர். திருப்பரங்குன்றம் விவகாரத்தை மற்றொரு அயோத்தியாக மாற்றிவிட வேண்டும் என்று சமூகவலைதளங்களில் பேசுகிறார்கள். இன்று நாடாளுமன்றத்தில் நாங்கள் இந்த பிரச்சனையை எடுத்துரைத்தோம். அப்போது நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, 'நீங்கள் பேசுவது உங்களுக்கும் நல்லதல்ல. உங்கள் கட்சிக்கும் நல்லதல்ல.' என்று கூறுகிறார்.
மணிப்பூர் பாணி
இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. ஜீரோ நேரத்தில் உறுப்பினர்கள் தான் பேச முடியும். அங்கு அமைச்சர் எல். முருகன் நீண்ட நேரம் உரையாற்ற அனுமதி வழங்கப்பட்டது. அவர் பல அவதூறு தகவல்களை பேசியுள்ளார். மதக்கலவரம் செய்வதுதான் பாஜகவின் அரசியல் வியூகம். தமிழக மக்கள் என்ன செய்தாலும் வாக்களிக்க மறுக்கிறார்கள் என்பதால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த பார்க்கிறார்கள்.
தமிழக மக்கள் முதலில் தங்களை தமிழர்களாக உணர்கிறார்கள் என்பதை பாஜக உணர வேண்டும். யார் மக்களை பிளவுபடுத்தி ஆபத்தில் தள்ள பார்க்கிறார்கள், யார் பாதுகாப்பளிப்பார்கள் என்பதை மக்கள் நன்கறிவார்கள். இந்தப் பிரச்சனையில் அத்தனை எதிர்க்கட்சிகளும் எங்களுடன் உறுதுணையாக உள்ளனர். மணிப்பூரிலும் ஒரு தவறான தீர்ப்பிற்கு பிறகு தான் கலவரம் வெடித்தது.
தமிழ்நாடு அமைதி
எனவே இது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். மதத்தின் பெயரால் பாஜக குளிர்காய நினைக்கிறது. தமிழகத்தில் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்த பார்க்கிறார்கள். திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு அமைதியாக தான் உள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் எங்காவது அமைதி நிலவுகிறதா. யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் செயல்பாடு இருக்காது." என்றார்.












Click it and Unblock the Notifications