வெள்ளை தழும்பு உள்ளவர்களை ராணுவத்தில் பணியாற்ற அனுமதியுங்கள்.. திமுக எம்.பி வைத்த முக்கிய கோரிக்கை!
டெல்லி: தோல் நிறமி குறைப்பாட்டால் வெள்ளைத் தழும்புகள் உள்ளவர்களை இந்திய ராணுவத்தில் சேர்க்க வேண்டும் எனக் கோரி நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார் திமுக எம்.பி எம்.எம்.அப்துல்லா.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 4-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதன் 5-ஆம் நாளான நேற்று ராஜ்யசபாவில் பேசிய திமுக எம்.பி எம்.எம். அப்துல்லா, விட்டிலிகோ ஹைப்பர் பிக்மென்டேஷன் எனப்படும் தோல் நிறமி குறைபாடுகளால் ஏற்படும் வெள்ளைத் தழும்புகள் உள்ளவர்களை இந்திய இராணுவத்தில் பணியமர்த்திட பரிசீலிக்க வேண்டி நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து உரை ஆற்றினார்.

அப்போது பேசிய திமுக எம்.பி அப்துல்லா, "உலக மக்கள் தொகையில் 1-லிருந்து 4 சதவீத மக்கள் தோல் நிறமி குறைபாட்டு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். விட்டிலிகோ நோய் குறைபாடு எனப்படும் தோல் நிறமி குறைபாடு உள்ளவர்களை ராணுவத்தில் பணியாற்ற அனுமதியுங்கள். இது தொற்றக்கூடிய நோய் இல்லை.
இத்தகையவர்களை ராணுவத்தில் பணியாற்றிட அனுமதிப்பதில்லை. எனவே இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்திய இராணுவத்தில் பணியாற்றிட தேவையான நடவடிக்கையை எடுக்க பரிசீலனை செய்ய வேண்டும்" என்று பாதுகாப்பு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்கள், தோலுக்கு நிறம் தரும் 'மெலனோசைட்' என்கிற தோல் நிறமியை, நோய் கிருமி என்று நினைத்து அழித்துவிடுகிறது. இது ஒரு தற்செயலான நிகழ்வுதான். அது எந்த இடத்தில் நடக்கிறதோ அந்த இடத்தில் வெண்புள்ளிகள் ஏற்பட்டு தோலின் நிறம் மாற்றமடையும். இந்த விட்டிலிகோ, ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவாது.
எனினும், வெள்ளை தழும்புகள் உள்ளவர்களை இந்திய ராணுவத்திற்கு தேர்வு செய்வது கிடையாது. இது நீண்ட காலமாக ராணுவத்தில் பின்பற்றப்படும் வழக்கமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் தான், இதனை மாற்றக் கோரிக்கை விடுத்துள்ளார் திமுக எம்.பி அப்துல்லா.












Click it and Unblock the Notifications