பெண்கள் இடஒதுக்கீடு.. பாஜகவுக்கு சவால் விட்ட பி.வில்சன்! நாடாளுமன்றத்தில் திமுக அடுத்த மூவ்!
டெல்லி: மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை ஆகியவற்றுக்காகக் காத்திருக்காமல், பெண்கள் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த கோரி, மாநிலங்களவையில் திமுக எம்பி பி.வில்சன் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்திருக்கிறார்.
பெண்கள் இடஒதுக்கீடு மசோதா கடந்த 2023ம் ஆண்டே நிறைவேற்றப்பட்டுவிட்டது. இது சட்டமாக அமல்படுத்தப்படுவதாக ஏப்.16ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இப்படி இருக்கையில், இதை அமல்படுத்த வேண்டும் எனில், தொகுதி மறுவரையறை தொடர்பான 131-வது சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்று, மத்திய அரசு மசோதாவை கொண்டு வந்திருந்தது.

எதிர்க்கட்சிகள் சம்பவம்
இந்த மசோதா மீதான விவாதத்தில், மத்திய அரசு ஏன் தொகுதி மறுவரையறையை பெண்கள் இடஒதுக்கீட்டுடன் இணைக்கிறது? என்று எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியிருந்தன. மட்டுமல்லாது கடந்த 2023ல் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டபோது, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் அனைவரும் ஒன்றாக வாக்களித்திருந்தனர். இதை தற்போது நினைவுப்படுத்தி.. தொகுதி மறுவரையறை உடன் பெண்கள் இடஒதுக்கீட்டை இணைத்ததற்கு எதிர்க்கட்சி எம்பிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
தோற்கடிக்கப்பட்ட மசோதா
இப்படியாக நேற்று தொகுதி மறுவரையறை தொடர்பான 131-வது சட்டத்திருத்த மசோதா தோற்கடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இன்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன், தனிநபர் மசோதாவை தாக்கல் செய்திருக்கிறார். அதில், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை ஆகியவற்றுக்காகக் காத்திருக்காமல், பெண்கள் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த மசோதா மீதான விவாதத்தை அனுமதிக்கக் கோரி, மாநிலங்களவை விதி 267-இன் கீழ் அவையின் தலைவருக்கு நோட்டீஸ் அளித்திருந்தார். இருப்பினும், அவர் அதற்கு அனுமதி மறுத்துவிட்டார்.
மசோதாவின் முக்கியமான அம்சங்கள்
தொகுதி மறுவரையறை மீதான தடையை 2051-ஆம் ஆண்டு வரை நீட்டிக்க வேண்டும். மக்களவை இடங்களை மீண்டும் ஒதுக்கீடு செய்ய வேண்டுமானால், மூன்றில் இரண்டு பங்கு (2/3) மாநிலங்களின் ஒப்புதலைப் பெறுவதைக் கட்டாயமாக்க வேண்டும்.
பி.வில்சனின் தனிநபர் மசோதா
இது குறித்து வில்சன் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "மத்திய அரசு இந்த மசோதாவிற்கு ஆதரவு அளிக்கவில்லை. மிக எளிதாகச் செய்திருக்க வேண்டிய ஒரு விஷயத்தைப் பாஜக அரசு சிக்கலாக்கியிருக்கிறது. இதிலிருந்தே பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் எண்ணம் பாஜகவிற்கு இல்லை என்பது தெளிவாகிறது. பெண் சக்தி என்ற பெயரில் அரசியல் செய்துகொண்டு, அதன் பின்னணியில் தொகுதி மறுவரையறையை திணிப்பதே பாஜக தலைமையிலான கூட்டணியின் நோக்கம் என்பது இதன் மூலம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
சவால் விட்ட வில்சன்
வெற்று முழக்கங்களை விடுவதை நிறுத்திவிட்டு, நிபந்தனைகள் இன்றி பெண்கள் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த எனது மசோதாவை ஏற்றுக்கொள்ளுமாறு அல்லது இது போன்ற ஒரு மசோதாவைக் கொண்டு வருமாறு பாஜகவிற்கு நான் சவால் விடுகிறேன்.
அவர்களால் இதைச் செய்ய முடியாவிட்டால், பாஜக என்பது "பாரதிய ஜும்லா பார்ட்டி" (பொய் வாக்குறுதி அளிக்கும் கட்சி) என்பதற்கு இதுவே சாட்சியாக அமையும்" என்று கூறியிருக்கிறார்.















Click it and Unblock the Notifications